ஆளவந்தாா் அறக்கட்டளை நில வழக்கு... தள்ளுபடி செய்த நீதிமன்றம்...!!

ஆளவந்தாா் அறக்கட்டளை நில வழக்கு... தள்ளுபடி செய்த நீதிமன்றம்...!!

ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான 1,175 ஏக்கர் நிலத்தை ஒப்படைக்க கோரி அவரது சகோதரரின் குடும்பத்தினர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த கோதண்டராமன், கஸ்தூரி, கவுசல்யா, கிருஷ்ணவேணி ஆகியோர் தாக்கல் செய்த மனுவில், கொடைவள்ளல் ஆளவந்தார் திருமணம் செய்து கொள்ளாததால், தன்  சொத்துக்களை நிர்வகிக்கும் வாரிசாக, தனது சகோதரர் வீராசாமியின் மகன் முத்துகிருஷ்ணனை நியமித்து 1914-ம் ஆண்டு உயில் எழுதி வைத்து இருந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.
 
கடந்த 1936ம் ஆண்டு முத்துகிருஷ்ணனும், அதன் பின் வாரிசாக இருந்த அவரது மகன்கள்  லோகநாத நாயக்கர், ஜெயராமா நாயக்கர் ஆகியோரும்  இறந்த பின், சொத்து நிர்வாக உரிமையை அவர்களின் வாரிகளான தங்களிடம் தராமல்,  நஞ்சை, புஞ்சை என 1,175 ஏக்கர் நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை நிர்வகிப்பதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், 1,175 ஏக்கர் நிலத்தை ஒப்படைக்க கோரி அறநிலையத்துறைக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி அளித்த மனுவை பரிசீலிக்கவும், நிலத்தை தங்களிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரியிருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்எம்டி.டீக்காராமன், ஆளவந்தாரின் 1914ம் ஆண்டு உயிலின்படி  சொத்துக்களை ஒப்படைக்க கோரி அளித்த மனுவுக்கு பதிலளித்த  அறக்கட்டளை செயல் அதிகாரி, நீதிமன்ற உத்தரவின்படி சொத்துக்கள் அறக்கட்டளை வசம் உள்ளதாகவும், அறக்கட்டளை தற்போது அறநிலையத் துறையின் கீழ் செயல்படுவதாகவும், சொத்துக்களை கேட்ட யாருக்கும் உரிமை இல்லை என்றும் கூறியிருப்பதைச் சுட்டிக்காட்டி, மேற்கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.