சொத்து குவிப்பு வழக்கில் தொடர்ந்து வாய்தா கேட்ட ராஜேந்திர பாலாஜி- உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்

சொத்து குவிப்பு வழக்கில் தொடர்ந்து வாய்தா கேட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் தொடர்ந்து வாய்தா கேட்ட ராஜேந்திர பாலாஜி- உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கில், இரண்டு நீதிபதிகள் வெவ்வேறு தீர்ப்புகளை வழங்கினர். இதனால் வழக்கு மூன்றாவது நீதிபதியின் கருத்திற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு சென்றது.

இந்நிலையில், வழக்கில் இரண்டு நீதிபதிகளின் மாறுபட்டு கருத்து குறித்து எந்த விளக்கமும் இல்லை என்பதால் வழக்கை விசாரிக்க தடை விதிக்கக்கோரி ராஜேந்திர பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இத்தகைய சூழ்நிலையில் வழக்கு இன்று மீண்டும் உயர்நீதிமன்ற நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளதால், வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என ராஜேந்திர பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர், இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்கக் கூடாது என்ற உள்நோக்கத்துடனேயே பிழைகள் கொண்ட மனுவை ராஜேந்திர பாலாஜி தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருப்பதாக வாதிட்டார்.

இதையடுத்து, ராஜேந்திர பாலாஜி தரப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, இந்த வழக்கில் மேற்கொண்டு வாய்தா கேட்கக்கூடாது என கண்டிப்புடன் கூறினார். மேல்முறையீட்டு வழக்கை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுக்காவிட்டால், அடுத்த வாய்தாவில் இந்த வழக்கின் விசாரணை நடைபெறும் என தெரிவித்து, விசாரணையை செப்டம்பர் 1-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.