அரசு பேருந்தும் நிறுத்தப்படவில்லை - அமைச்சர் விளக்கம்!!!

அரசு பேருந்தும் நிறுத்தப்படவில்லை - அமைச்சர் விளக்கம்!!!

அரசுப் பேருந்துகளின் இயக்கம் குறைக்கப்படவில்லை என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.

இலவசப் பயணம் என்பதால் பெண்களை நடத்துநர்கள் மதிப்பதில்லை

தமிழகத்தில் கடந்த ஆண்டு மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க ஆட்சி அமைந்தது. மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றவுடன் முதல் கையெழுத்தாக அரசுப் பேருந்துகளில் பெண்கள், திருநங்கைகளுக்கு இலவசப் பயணம் என்ற கோப்பில் கையெழுத்திட்டார். இந்தத் திட்டம் தமிழகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக, கிராமப் புற பெண்களுக்கு பெரிதும் இந்தத் திட்டம் பெரிதும் உதவியாக இருந்துவருகிறது. இருப்பினும், இந்தத் திட்டம் குறித்து அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுந்துவருகின்றன.

இலவசப் பயணம் என்பதால் பெண்களை நடத்துநர்கள் மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகள் அவ்வப்போது எழுந்துவருகின்றன. இந்தநிலையில், இலவசப் பயணத்தின் காரணமாக கிராமப் புறங்களில் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதைத்தொடர்ந்து எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழக அரசுக்கு பல்வேறு துறைகளின் மூலம் வருமானம் வரும் நிலையில், அரசு பேருந்துத் துறை நஷ்டத்தில் நடப்பதாகக் காரணம் காட்டி, கிராமப்புற பேருந்துகளை நிறுத்தும் இந்த மக்கள் விரோத அரசின் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

மேலும் படிக்க | அட இப்படியா ஏமாற்றுவார்கள் - கோடி கணக்கில் பணத்தை இழந்த பிரபல இயக்குநர்

ஆட்சிக்கு வந்து 24 மாதங்கள் முடிவடைய உள்ள நிலையிலும், இதுவரை ஒரு புதிய பேருந்தைக் கூட இந்த திமுக அரசு வாங்கவில்லை. இதுதான் இந்த நிர்வாகத் திறனற்ற அரசின் சாதனை. போக்குவரத்துத் துறை என்பது ஒரு சேவைத் துறை. இதில் தமிழக மக்களின் நல்வாழ்வுக்கு எதிராக, ஏதேனும் மறைமுகத் திட்டத்தோடு இந்த அரசு செயல்பட்டால், அதை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது.

எனவே, உடனடியாக புதிய பேருந்துகளை வாங்கி, மகளிர் பயணம் செய்வதற்கு வசதியாக நகரப் பேருந்துகளின் செயல்பாட்டினை அதிகரிக்க வேண்டும் என்று இந்த அரசை வலியுறுத்துகிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்த விவகாரம் குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ‘திமுக ஆட்சி அமைந்தபின் எந்த அரசுப் பேருந்தும் நிறுத்தப்படவில்லை. தமிழ்நாடு போக்குவரத்து கழகத்திற்காக புதிதாக 4,300 பேருந்துகள் வாங்கப்பட உள்ளன. தி.மு.க அரசின் பெயரையும், புகழையும் எடப்பாடி பழனிசாமியால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை.

தவறையும், பொய்யையும் மறைக்க எடப்பாடி பழனிசாமி பொய் அறிக்கை

அ.தி.மு.க ஆட்சியின் தவறையும், பொய்யையும் மறைக்க எடப்பாடி பழனிசாமி பொய் அறிக்கை வெளியிட்டுள்ளார். அரசு மீது சேற்றை வாரி இறைக்கும் வகையில் பொய்யும், புரட்டுமாய் எடப்பாடி பழனிசாமியின் அறிக்கை உள்ளது. போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள ஓட்டுநர், நடத்துநர்கள் பணியிடங்கள் நிரப்பப்படும். ஓட்டுநர், நடத்துநர் பற்றாக்குறையால் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் 2,000 வழித்தடங்கள் முடக்கப்பட்டது. கடந்த 5 ஆண்டு கால அ.தி.மு.க ஆட்சியில் ஒரு ஓட்டுநர், நடத்துநர் கூட பணியில் சேர்க்கப்படவில்லை’ என்று தெரிவித்தார்.