திரும்ப.. திரும்ப பேசுற நீ.. முதலமைச்சரை அவதூறாக பேசியவர் கைது

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் குறித்து அவதூறு பரப்பும் வகையில் டிவிட்டரில் பதிவிட்ட கிஷோர் கே சுவாமியை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார்.

திரும்ப.. திரும்ப பேசுற நீ..  முதலமைச்சரை அவதூறாக பேசியவர் கைது

சமூக வலைதளங்களில் தொடர்ந்து அரசியல் தொடர்பான கருத்துக்களை பதிவிட்டு வருபவர் கிஷோர் கே சுவாமி. பாஜக ஆதரவு நிலைப்பாடு கொண்ட கிஷோர் கே சுவாமி, திமுக மற்றும் அதன் ஆதரவு கட்சிகள் குறித்து தொடர்ந்து கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

ஏற்கனவே திமுகவின் முன்னாள் முதலமைச்சர்கள், பத்திரிக்கையாளர்கள் குறித்து அவதூறு கருத்துகள் பதிவிட்டது என மொத்தம் 7 வழக்குகளில் அரசியல் விமர்சகர் கிஷோர் கே சுவாமி கைது செய்யப்பட்டு ஜூன் மாதம் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது 

சிறையில் இருந்து வெளியே வந்த கிஷோர் கே சுவாமி மீண்டும் டிவிட்டரில் அரசியல் விமர்சனம் செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 1ஆம் தேதி மழை வெள்ளத்தின் போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் பணிகளை விமர்சிக்கும் வகையில், புளியந்தோப்பு (டேஷ்) என தகாத வார்த்தையால் பேசி டிவிட்டரில் கிஷோர் கே சுவாமி பதிவிட்டிருந்தார். 

மேலும் படிக்க: வகுப்பறை கட்டிடங்கள், மாணவர் விடுதி... எங்கு தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்?

இந்த பதிவு முதலமைச்சரை அவதூறு பரப்பும் வகையில் இருப்பதாக கூறி எழும்பூரை சேர்ந்த இம்ரான் என்பவர் கடந்த 3 ஆம் தேதி மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் கிஷோர் கே சுவாமி மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் அவதூறு பரப்புதல், கலகத்தை தூண்டுதல் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, விசாரணைக்கு ஆஜராகும் படி கிஷோர் கே சுவாமிக்கு சம்மன் அனுப்பினர்.  

சம்மனுக்கு ஆஜராகாத கிஷோர் கே சுவாமி, இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு  சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையின் போது தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் இன்று கிஷோர் கே சுவாமியை  பாண்டிச்சேரியில் வைத்து மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட கிஷோர் கே சுவாமியை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.