விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட நபர் உயிரிழப்பு! போலீசார் அடித்து கொலை செய்துவிட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு!!

திருவண்ணாமலையில் வழக்கு விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்ட நபரை போலீசார் அடித்து கொலை செய்துவிட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... 

விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட நபர் உயிரிழப்பு! போலீசார் அடித்து கொலை செய்துவிட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு!!

தண்டராம்பட்டு வட்டம் தட்டரணை கிராமத்தில் உள்ள குறவர் இனத்தை சேர்ந்தவர் தங்கமணி. இவரை கடந்த 26ஆம் தேதி மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் சாராய வழக்கு குறித்து விசாரணை செய்ய காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். விசாரணை முடிந்து திருவண்ணாமலை கிளை சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்...  

இந்நிலையில் போலீசார் தாக்கியதாலேயே தங்கமணி உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவரது மகன், தாங்கள் குறவர் இன மக்கள் என்பதால் போலீசார் தங்கள் மீது பொய் வழக்கு போடுவதாகவும், சாராய வழக்கு போடக் கூடாது என்றால் லஞ்சம் கொடுக்க வேண்டும் என போலீசார் கூறியதாகவும் தெரிவித்தார். மேலும்,  தந்தையின் மரணத்திற்கு காரணமான போலீசார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், தங்கள் கிராமத்தினர் மீது பொய் வழக்குகள் போடுவதை போலீசார் நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார். 

இதனிடையே, இச்சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த உறவினர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே போலீசார் தடுத்து நிறுத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.