மாநில திட்டக்குழு கூட்டம் ஆரம்பம்...முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை!

மாநில திட்டக்குழு கூட்டம் ஆரம்பம்...முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாநில திட்டக்குழு கூட்டம் தொடங்கியுள்ளது.

சென்னை எழிலகம் வளாகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற இருந்த மாநில திட்டக்குழு கூட்டம் தொடங்கியுள்ளது.  இக்கூட்டத்தில் மாநில திட்டக்குழு துணை தலைவர் பேராசிரியர் ஜெ.ஜெயரஞ்சன், தலைமை செயலாளர் இறையன்பு, குழு உறுப்பினர்கள் பேராசிரியர் இராம.சீனுவாசன், பேராசிரியர் ம.விஜயபாஸ்கர், பேராசிரியர் சுல்தான் அஹ்மத் இஸ்மாயில், மு.தீனபந்து, எழிலன் எம்எல்ஏ, மல்லிகா சீனிவாசன், மருத்துவர் ஜோ. அமலோற்பவநாதன், சித்த மருத்துவர் கு.சிவராமன், முனைவர் நர்த்தகி நடராஜன் மற்றும் அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்த அரசின் உயர் அதிகாரிகள் பங்கேற்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிக்க : திடீர் உணவகமாக மாறிய பேருந்து நிறுத்தம்...அதிர்ச்சியில் பயணிகள்!

இக்கூட்டத்தில், தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் செயல்பாடுகள், திட்டத்தால் பயனடைந்து வரும் பயனாளிகள், தொழில்கள் 4.0, சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்கள், கல்வி, வேலைவாய்ப்பு, கைத்தறி மற்றும் சுற்றுலா மேம்பாட்டு திட்டங்கள் , சுகாதார நலக் கொள்கை என அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் கூறப்படுகிறது.

மேலும், அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கான நிதி, செலவிடப்பட்ட தொகை, திட்டமிடல், தமிழக மேம்பாட்டுக்கான புதிய இலக்கு நிர்ணயிப்பது, கண்காணிப்பு, மதிப்பீடு மற்றும் கொள்கைக்கான ஆலோசனை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.