சினிமா பாணியில் கடத்தல் கும்பலை துரத்திப் பிடித்த போலீஸ்!!!

கோவில்பட்டியில் பாத்திரக்கடை வியாபாரி கடத்தி, ரூ 5 லட்சம் பறித்த பெங்களூர் கும்பலை, சினிமாவை மிஞ்சும் வகையில் துரத்தி கைது போலீசார் செய்தனர்.

சினிமா பாணியில் கடத்தல் கும்பலை துரத்திப் பிடித்த போலீஸ்!!!

படங்களில் நாம் கடத்தல் கும்பல்களைத் துரத்திப் பிடிக்கும் காட்சிகளை நிஜ வாழ்க்கையில் பார்க்க, பலருக்கும் ஆசைகள் இருக்கும். ஆனால், உண்மையில் அந்த நிகழ்வு நடந்திருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பாத்திரக்கடை வைத்துர்ப்பவரை, ஐந்து பேர் கொண்ட கும்பல் கடத்தி, ரூ. 5 லட்சம் கோரிக்கை வைத்திருக்கின்றனர். பணத்தைப் பெற்றதும், சினிமா பாணியில், போலீசார் அந்த கும்பலைத் துரத்திப் பிடித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நடராஜபுரம் தெருவை சேர்ந்தவர் தங்கம். இவர் இளையரசனேந்தல் சாலை ரயில்வே சுரங்க பாலம் அருகே  பாத்திரகடை மற்றும்  இரும்பு கடை நடத்தி வருகிறார். நேற்று மதியம், அவர் தனது கடையில் அமர்ந்து இருந்த போது, டிப் டாப் உடையணிந்த 6 பேர் கடைக்கு வந்து, தாங்கள் போலீஸ் என்றும், திருட்டு பொருட்கள் வாங்கியது தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் செல்ல வந்துள்ளதாகவும் கூறியிருக்கின்றனர்.

இதற்கு தங்கம் மறுக்கவே வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று ஒரு இன்னோவா காரில் ஏற்றிச் சென்றுள்ளனர். கரூர் டோல்கேட் அருகே சென்றதும் 20 லட்சம் கொடுத்தால் விட்டுவிடுவோம், இல்லை என்றால் கைது செய்து அடைத்துவிடுவோம் என்று அவர்கள் மிரட்டியுள்ளனர். ஆனால், அப்போதும் பயந்திறாத தங்கம் அவர்களது கோரிக்கையை மறுத்துள்ளார்.

எந்த வகையில் பேசினாலும், பிடி கொடுக்காத தங்கத்திடம், பேரம் பேசிய அந்த கும்பல், இறுதியில் 5 லட்ச ரூபாய்க்கு பேசி முடித்துள்ளனர். இதையடுத்து தங்கம் தனது மகனிடம், பணத்தை எடுத்து வரச்சொல்லியிருக்கிறார். விருதுநகர் அருகே பணத்தை கொடுத்து பிறகு அந்த கும்பல் தங்கத்தினை விடுவித்துள்ளது.

அங்கிருந்து வந்த தங்கம் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் கடையில் உள்ள  சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை அடையாளம் வைத்து, கோவில்பட்டி டிஎஸ்பி வெங்கடேஷ் மேற்பார்வையில் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுஜித் ஆனந்த் தலைமையில் போலீசார் விசாரணையை தொடங்கினர்.

மேலும் டோல் கேட்களுக்கும் தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து, கடத்தியவர்கள் பயணித்த கார் கரூர் அரவக்குறிச்சி டோல்கேட் பகுதியில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அங்குள்ள அதிகாரிகள் குற்றவாளிகளை பிடிக்க முயற்சி செய்து உள்ளனர். ஆனால், படத்தில் வருவது போல, அந்த கும்பல் நிற்காமல் தடுப்புக்களை தகர்த்து விட்டு சென்றுள்ளது.

பின், சினிமா பாணியில் சேசிங் செய்த போலீசார், தொடர்ந்து அவர்களை விரட்டிச் சென்று வெள்ளியணை காவல் நிலைய சரகம் ஆட்டையாம்பரப்பு அருகில், அவர்களது காரை மடக்கிப் பிடித்தனர். காரில் 5 பேர் இருந்த நிலையில், அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெங்களூரைச் சேர்ந்த பரன்கவுடா, தாஸ், டேனியல், பவுல், பெரோஸ் கான் என அடையாளம் காணப்பட்ட நிலையில், ஆறாவது நபரை போலீசார் தேடி வருகின்றனர். விறுவிறுப்பாக நடந்த இந்த சேசிங், அப்பகுதியில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.