சிவசங்கர் பாபாவின் 3வது போக்சோ வழக்கு... ஆவணங்களை தாக்கல் செய்தது சி.பி.சி.ஐ.டி....

சிவசங்கர் பாபா-வை 3வது போக்சோ வழக்கிலும் கைது செய்ய தேவையான ஆவணங்களை சி.பி.சி.ஐ.டி போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

சிவசங்கர் பாபாவின் 3வது போக்சோ வழக்கு... ஆவணங்களை தாக்கல் செய்தது சி.பி.சி.ஐ.டி....
சுசில் ஹரி உண்டு உறைவிடப் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்கள் அளிக்கபட்ட நிலையில் அடையாறு அனைத்து மகளிர் போலீசார் சிவசங்கர் பாபா மீது 3 தனித்தனி வழக்குகளை பதிவு செய்தனர். வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு மாற்றப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த சிவசங்கர் பாபா டெல்லியில் வைத்து தனிப்படை போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த நடன ஆசிரியை சுஸ்மிதா என்பவரையும் சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்தனர்.
 
ஏற்கனவே சிவசங்கர் பாபா 2 போக்சோ வழக்குகளில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் மீதான 3வது போக்சோ வழக்கிலும் அவரை கைது காட்ட சி.பி.சி.ஐ.டி போலீசார் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். 3வது போக்சோ வழக்கில் சிவசங்கர் பாபா-வை கைது காட்ட தேவையான அனைத்து ஆவணங்களையும் சி.பி.சி.ஐ.டி போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். நாளை நீதிமன்ற விடுமுறை என்பதால் வரும் வியாழக்கிழமை சிவசங்கர் பாபா-வை சி.பி.சி.ஐ.டி போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 3வது போக்சோ வழக்கிலும் கைது காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
அதேபோல சிவசங்கர் பாபா-விற்கு உடந்தையாக இருந்த ஆசிரியைகள் 5 பேருக்கு நேற்று விசாரணைக்கு ஆஜராக சி.பி.சி.ஐ.டி போலீசார் சம்மன் அனுப்பிய நிலையில், அவர்கள் ஆஜர் ஆகாமல் தலைமறைவாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் மீண்டும் அவர்களுக்கு சம்மன் அனுப்ப சி.பி.சி.ஐ.டி போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதிலும் அவர்கள் ஆஜராகாத பட்சத்தில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி அவர்களை அதிரடியாக கைது செய்யவும் சி.பி.சி.ஐ.டி போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.