ஓகே சொன்ன நீதிமன்றம்...எதிர்க்கும் திருமாவளவன்...மறுக்கும் நீதிபதி...!

ஓகே சொன்ன நீதிமன்றம்...எதிர்க்கும் திருமாவளவன்...மறுக்கும் நீதிபதி...!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கிய உத்தரவை திரும்பப் பெறக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 
 
ஆர்.எஸ்.எஸ்.அணிவகுப்புக்கு அனுமதி:

தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் அக்டோபர் 2ம் தேதி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பு திட்டமிட்டிருந்த நிலையில், அதற்கு அனுமதி வாங்குவதற்கு நீதிமன்றத்தை நாடினர். சென்னை உயர்நீதிமன்றம் அவர்களுக்கு நிபந்தனைகளுடன் அனுமதியும் வழங்கியுள்ளது. அத்துடன், ஊர்வலத்துக்கு செப்டம்பர் 28 ம் தேதிக்குள் அனுமதி வழங்கவும் காவல்துறைக்கு தனி நீதிபதி ஜி.கே இளந்திரையன் உத்தரவிட்டிருந்தார். 

திருமாவளவன் மனு தாக்கல்:

இந்த சூழ்நிலையில், ஆர்.எஸ். எஸ் அணிவகுப்புக்கு வழங்கிய உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்தார். அதில், மத நல்லிணக்கத்தை குலைத்து பிரித்தாளும் கொள்கையை பின்பற்றும் ஆர்எஸ்எஸ் இயக்கத்துக்கு காந்தி ஜெயந்தி அன்று அணிவகுப்பு நடத்த அனுமதி வழங்க கூடாது என்றும், விஜய தசமி மீது நம்பிக்கை இல்லாத அம்பேத்கரின் கொள்கைக்கு முரணாக இந்த அணிவகுப்பு நடத்தப்படுவதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சமூக நல்லிணக்க ஊர்வலம்:

தொடர்ந்து, அக்டோபர் 2ம் தேதி வி.சி.க சார்பில் தமிழகம் முழுவதும் சமூக நல்லிணக்க ஊர்வலம் நடத்த உள்ளதாகவும், எனவே இந்த மனுவை அவசர வழக்காக  விசாரிக்க வேண்டும் எனவும் திருமாவளவன் தரப்பில் அவசர வழக்காக முறையிடப்பட்டது. 

இதையும் படிக்க: அசோக் கெலாட் தலைவர் தேர்தலில் இருந்து நீக்கமா? புதிய அழைப்பு யாருக்கு?

அவசர வழக்காக ஏற்க முடியாது:

திருமாவளவனின் வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி இளந்திரையன், ஏற்கனவே உத்தரவிட்ட வழக்கில் மனுதாரராகவோ அல்லது எதிர் மனுதாரராகவோ  இல்லாத போது இந்த மனுவை எப்படி விசாரிக்க முடியும் என கேள்வி எழுப்பி, அவசர வழக்காக விசாரிக்க மறுத்துவிட்டார். தேவைப்பட்டால் அனுமதி வழங்கிய உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யலாம் என திருமாவளவன் தரப்புக்கு நீதிபதி அறிவுறுத்தினார். இதையடுத்து திருமாவளவன் தரப்பில், பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி. கிருஷ்ணகுமார் அமர்வில் முறையீடு செய்யப்பட்டது. ஆனால் நீதிபதிகள், திருமாவளவன் கோரிக்கை குறித்து மேல்முறையீடாக தான் தாக்கல் செய்யமுடியும் என விளக்கம் அளித்துள்ளனர்.