என்னா ஒரு டெக்னிக்...செல்போன் டவரை நூதன முறையில் கழற்றிய கொள்ளையர்கள்!

என்னா ஒரு டெக்னிக்...செல்போன் டவரை நூதன முறையில் கழற்றிய கொள்ளையர்கள்!

வாழப்பாடி அருகே செல்போன் கோபுரத்தை நூதன முறையில் திருடிய மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். 

செல்போன் கோபுரத்தை கழற்றி சென்ற கும்பல்:

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த பெருமாபாளையம் கிராமத்தில் உள்ள தனியார் நிலத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தனியார் நிறுவனத்தின் செல்போன் கோபுரம் அமைந்துள்ளது. அந்த கோபுரத்தை, கடந்த ஜூலை மாதம் 27ஆம் தேதி மர்ம கும்பல் ஒன்று போலி ஆவணங்களை காண்பித்து ராட்சத கிரேன் மூலம் கழற்றிச் கடத்தி சென்றது. 

புகார் அளித்த மேலாளர்:

மர்ம கும்பல் செல்போன் கோபுரத்தை கழற்றி சென்றது குறித்து தகவல் அறிந்த தனியார் நிறுவன மேலாளர் தமிழரசன் என்பவர், தங்களது நிறுவனத்திற்கு சொந்தமான செல்போன் கோபுரத்தை கண்டுபிடித்து மீட்டு தருமாறு வாழப்பாடி போலீசில் புகார் அளித்தார். 

தனிப்படை அமைத்து விசாரணை:

இந்த புகார் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், நூதன முறையில் திருட்டில் ஈடுபட்ட மர்ம கும்பலை கூண்டோடு பிடிப்பதற்காக சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ் உத்தரவிட்டார். இதையடுத்து, வாழப்பாடி டி.எஸ்.பி. தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் படிக்க: https://malaimurasu.com/posts/sports/india-pakistan-t20-cricket-photos

குற்றவாளிகள் கைது:

தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகர் பகுதியை சேர்ந்த சண்முகம், நெல்லை மாவட்டம் நாங்குநேரி ஏமன்குளம் பகுதியை சேர்ந்த நாகமுத்து, வாழப்பாடி காமராஜர் நகர் ஆத்துமேடு பகுதியை சேர்ந்த ராகேஷ் சர்மா ஆகிய 3 பேரும் செல்போன் கோபுரத்தை திருடிச் சென்று ஸ்ரீவில்லிபுத்தூரில் விற்பனை செய்தது தெரியவந்தது. 

வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா?:

தொடர்ந்து, கைதான 3 பேரிடம் இருந்து செல்போன் கோபுரத்தின் பாகங்களையும்,  , ஜெனரேட்டர், சுமார் 10 டன் எடையுள்ள இரும்பு தளவாடப் பொருட்கள் மற்றும் 6 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் ரொக்கம் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்தனர். மேலும், இந்த நூதன திருட்டு சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும், மீட்கப்படாத மற்ற உதிரி பாகங்களை மீட்பது குறித்தும் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.