வெள்ளக்காடானது சென்னை... இன்று அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை...
சென்னையில் தொடர் மழை காரணமாக அரசு அலுவலகங்களுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னையில் இடைவிடாது பெய்து வரும் கனமழையால், எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதனால் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல், பெரும்பாலான மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, இன்று அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவை வழங்கும் துறைகள் தவிர்த்து அனைத்து அரசு அலுவலகங்களும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஆவின், பொது போக்குவரத்து, மின்சாரம், உள்ளாட்சித் துறை, மருத்துவத் துறை, வருவாய்த் துறை போன்ற அத்தியாவசிய சேவைகள் வழங்கும் அரசுத் துறைகள் தவிர்த்து, சென்னை மாவட்டத்திலுள்ள இதர அரசு அலுவலகங்களுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மழை நிலவரங்களை கருத்தில் கொண்டு தனியார் நிறுவனங்களும் பணியாளர்களுக்கு ஒருநாள் விடுமுறை அளிக்க வேண்டும் என்றும், அல்லது வீட்டில் இருந்து பணிபுரியும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும், தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.