ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்...  அருவியின் அழகை கண்டு ரசித்தனர்...

ஆங்கில புத்தாண்டு விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் ஏரளானமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்...  அருவியின் அழகை கண்டு ரசித்தனர்...

தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு கர்நாடகா, ஆந்திரா, கேரளா, உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தொடர்ந்து  காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பெய்த கனமழை காரணமாக ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இந்த நிலையில் மழை பொழிவு குறைந்ததால், காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக குறையத் தொடங்கியது. தொடர்ந்து  நேற்று மாலை பிலிகுண்டுலு  நிலவரப்படி காவிரி ஆற்றில் வினாடிக்கு 6, ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து வந்து கொண்டுள்ளது. இந்த நிலையில்  நேற்று ஆங்கில புத்தாண்டு விடுமுறையை கொண்டாட  ஒகேனக்கல்லில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

ஒகேனக்கல் வந்த சுற்றுலா பயணிகள், பரிசலில் சென்று, ஐந்தருவியில்  ஆர்ப்பரித்து கொட்டும் அருவியின் அழகை கண்டு ரசித்தனர். மேலும் விடுமுறை கொண்டாட்டத்திற்காக ஒகேனக்கல்லில்  சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால், சுற்றுலா தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து ஒகேனக்கல்லில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்ததால் ஆலம்பாடி, மணல் திட்டு, மெயின் அருவி, பரிசல் துறை உள்ளிட்ட பகுதியில் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.