வெளிநாடுகளிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.6 லட்சம் மதிப்புடைய போதை மாத்திரைகள், போதை பவுடர், கஞ்சா உள்ளிட்டவை பறிமுதல்....சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி..!

அமெரிக்கா,நெதா்லாந்து நாடுகளிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.6 லட்சம் மதிப்புடைய போதை மாத்திரைகள்,போதை பவுடா்,பதப்படுத்தப்பட்ட கஞ்சா  உள்ளிட்டவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

வெளிநாடுகளிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.6 லட்சம் மதிப்புடைய போதை மாத்திரைகள், போதை பவுடர், கஞ்சா உள்ளிட்டவை பறிமுதல்....சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி..!

சென்னை விமானநிலையத்தில் கொரியா் பாா்சல் பிரிவு பகுதியில் வெளிநாடுகளிலிருந்து வந்திருந்த  பாா்சல்களை சென்னை விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் அமெரிக்கா,நெதா்லாந்து நாடுகளிலிருந்து 3 பாா்சல்கள் வந்திருந்தது,  2 பாா்சல்கள் சென்னை முகவரியிலும், ஒரு பாா்சல் ஆந்திரா மாநில முகவரியிலும் வந்திருந்தன. அந்த பாா்சல்களில் பிறந்தநாள், திருமணநாள் பரிசு இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த பாா்சல்கள் குறித்து சந்தேகமடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவற்றை பிரித்து பார்த்து சோதனை செய்தனர். அப்போது அந்த பாா்சல்களில் மிகவும் விலை உயா்ந்த போதை மாத்திரைகள் 52,பதப்படுத்தப்பட்ட உயா்ரக கஞ்சா, போதை பவுடா் ஆகியவை இருந்தது தெரியவந்தது. இந்த போதை பொருட்களின் வெளிநாட்டு மதிப்பு ரூ.3. 12 லட்சம் என்றும்  இந்திய மதிப்பு சுமாா் ரூ.6 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து பாா்சல்களில் இருந்த முகவரிகளை சுங்கத்துறை அதிகாரிகள் தொடா்பு கொண்டனா். ஆனால் முகவரி போலியானது என தெரியவந்தது. பின்னர் போதை பொருட்கள் அடங்கிய 3 கொரியர் பார்சல்களையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், அதோடு போதைப்பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் சுங்கத்துறை சட்டங்களின் கீழ் வழக்குபதிவு செய்து, போலி முகவரிகளில் வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்கு போதைப்பொருட்களை வரவழைத்த ஆசாமிகளை தேடி வருகின்றனர்.