10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அலகுத்தேர்வு... தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை உத்தரவு...

10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, மாதந்தோறும் வாட்ஸ்அப் மூலம் அலகுத் தேர்வுகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அலகுத்தேர்வு... தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை உத்தரவு...
தமிழகத்தில் கடந்தாண்டு கொரோனா காரணமாக பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், நடப்பு கல்வியாண்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களை பொதுத்தேர்வுக்கு தயார்படுத்தும் நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டுள்ளது.
 
அதன்படி, கல்வித்தொலைக்காட்சி மற்றும் ஆன்லைனில் நடத்தப்படும் பாடங்களில் இருந்து, ஒவ்வொரு மாத இறுதியிலும் வாட்ஸ்அப் மூலமாக அலகுத் தேர்வு நடத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கென மாணவர்கள் மற்றும் மாணவியர்களுக்கு தனித்தனி வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்கி, அதில் வினாத்தாளை பதிவிட்டு, விடைகளை எழுதி வாங்க வேண்டும் என்றும், ஒவ்வொரு மாத இறுதியிலும் 50 மதிப்பெண்களுக்கு அலகுத் தேர்வை நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ள பள்ளிக்கல்வித்துறை, ஜூன் மற்றும் ஜூலை மாத பாடங்களை மீண்டும் ஒருமுறை நினைவூட்டி விட்டு, அலகுத் தேர்வை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
 
மேலும், அலகுத் தேர்வுக்கான வினாத்தாளை முதன்மைக்கல்வி அலுவலகத்தில் இருந்து பெற்று தேர்வுகள் நடத்த வேண்டும் என்றும், பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தயாராக ஏதுவாக, வாட்ஸ்அப் மூலம் தேர்வை நடத்தி முடிக்குமாறு அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.