விருது கோரி விண்ணப்பித்த பேராசிரியர்...! அசல் சான்றிதழ்களை ஒப்படைக்காத பல்கலைக்கழகம்..!

விருது கோரி விண்ணப்பித்த பேராசிரியர்...! அசல் சான்றிதழ்களை ஒப்படைக்காத பல்கலைக்கழகம்..!

விருது கோரி விண்ணப்பித்த பேராசிரியரின் அசல் சான்றிதழ்களை எட்டு வாரங்களில் திரும்ப ஒப்படைக்கா விட்டால் 10 லட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும் என, சென்னை பல்கலைக்கழகத்திற்கு உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது

சென்னை பல்கலைக்கழகத்தில் பயோகெமிஸ்ட்ரி துறையில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற சுப்ரமணியன், 2016 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு மூத்த விஞ்ஞானி விருதுக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில் தனக்கு விருது வழங்கப்படாததால் தனது அசல் சான்றிதழ்களை திருப்பி அளிக்கக்கோரி சென்னை பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார். அதன் மீது எந்த பதிலும் அளிக்கப்படாத நிலையில், தனது அசல் சான்றிதழ்களை திரும்ப அளிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். 

இந்த மனு, நீதிபதி ஆர். சுப்ரமணியன் முன்பு விசாரணைக்கு வந்த போது, சென்னை பல்கலைக்கழக பதிவாளர் தரப்பில், மனுதாரரின் அசல் சான்றிதழ்களை  பதிவாளர் அலுவலகம் பெறவில்லை என தெரிவிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்படி மனுதாரரின் விண்ணப்பம் மற்றும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அசல் சான்றிதழ்கள் மட்டும் தங்களுக்கு கிடைக்க பெறவில்லை என பதிவாளர் கூறுவதை ஏற்க முடியாது எனக் குறிப்பிட்ட நீதிபதி, மனுதாரரின் அசல் சான்றிதழ்களை எட்டு வாரங்களில் சென்னை பல்கலைக்கழகம் ஒப்படைக்க வேண்டும் எனவும், இல்லாவிட்டால் மனுதாரருக்கு இழப்பீடாக 10 லட்சம் ரூபாயை வழங்க வேண்டும் எனவும் சென்னை பல்கலைக்கழக துணை வேந்தருக்கு உத்தரவிட்டார்.
 
மேலும், அசல் சான்றிதழ்கள் காணாமல் போயிருந்தால், அதற்கு காரணமானவர்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட நீதிபதி, சான்றிதழ் காணாமல் போனதற்கு காரணமானவர்களிடமிருந்து மனுதாரருக்கு இழப்பீடாக வழங்க வேண்டிய 10 லட்சம் ரூபாய் தொகையை வசூலிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
தொடர்ந்து, மனுதாரருக்கு வழக்குச் செலவாக 10 ஆயிரம் ரூபாயை வழங்கவும், சென்னை பல்கலைக்கழகத்துக்கு  உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை முடித்து வைத்தார்.

இதையும் படிக்க :  உஷார்..! வங்கி ஊழியரின் மோசடி...! வாடிக்கையாளரின் ஆவணங்களை திருடி...?