ஆபாச வீடியோ அனுப்பியவர்களின் ஆணுறுப்பை வெட்டி பதிவிடுவேன்: வீரலட்சுமி எச்சரிக்கை 

தனக்கு வாட்ஸ் ஆப் மற்றும் மெசஞ்சரில் ஆபாச வீடியோக்கள் அனுப்பியவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அவர்களின் ஆணுறுப்பை தானே நேரடியாகச் சென்று வெட்டி வீடியோ எடுத்து, அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிடுவேன் என தமிழர் முன்னேற்றப் படை கட்சி நிறுவனர் வீரலட்சுமி தெரிவித்துள்ளார்.

ஆபாச வீடியோ அனுப்பியவர்களின் ஆணுறுப்பை வெட்டி பதிவிடுவேன்: வீரலட்சுமி எச்சரிக்கை 

தமிழர் முன்னேற்றப் படை கட்சியின் நிறுவனரான வீரலட்சுமி சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த புகாரில் தனக்கு வாட்ஸ் ஆப் மற்றும் மெசஞ்சர் மூலம் சிலர் ஆபாச வீடியோக்களை அனுப்பி வருவதாகவும், சமூக வலைதளங்களில் தன்னை விபச்சாரி என்று பதிவிட்டு அவதூறு பரப்பி வருவதாகவும் குறிப்பிட்டு அவர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

 பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வீரலட்சுமி, சமீப காலமாக வயது வித்யாசமின்றி பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் பெண்களின் மானத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் சம்பவங்கள் அரங்கேறி வருவதாக தெரிவித்தார். தான் ஒரு அரசியல் கட்சியை நடத்தி வரும் நிலையில் சட்டமன்ற வேட்பாளராக இருந்த தனக்கு சட்டமன்ற தேர்தல் நேரத்தில் சிலர் வாட்ஸ் ஆப் மூலம் ஆபாசக் குறுஞ்செய்திகள் மற்றும் வீடியோக்கள் அனுப்பி தொந்தரவு செய்ததாகவும், அது தொடர்பாக பரங்கிமலை துணை ஆணையரிடம் புகார் அளித்து அந்த புகார் சாஸ்த்ரி நகர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவித்த அவர், அப்புகாரில் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் குற்றவாளியை கண்டுபிடிக்காமல் காவல்துறை அலட்சியம் காட்டி வருவதாக குற்றஞ்சாட்டினார்.

 இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கமலேஷ், முனி என்ற இரு முகநூல் கணக்கிலிருந்து தனது முகநூல் கணக்கிற்கு மெசஞ்சர் மூலம் 40-50 ஆண் பெண் நிர்வாணமாக உறவு கொள்ளும் ஆபாச வீடியோக்கள் அனுப்பப்பட்டதாகவும், அதேபோல முத்து வீர முரளி என்ற முகநூல் கணக்கில் இருந்து தான் பதிவிட்ட வீடியோவில் தன்னை விபச்சாரி என குறிப்பிட்டு கமெண்ட் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பாகவும் நேற்று தபால் மூலம் காவல் ஆணையருக்கு புகார் அளித்தும் நடவடிக்கை இல்லாததால் இன்று நேரடியாக காவல் ஆணையர் அலுவலகத்தில் எழுத்துப் பூர்வமாக புகார் அளித்துள்ளதாகவும் கூறினார். ஒரு நடிகையின் புகாரை ஏற்று முன்னாள் அமைச்சரை கைது செய்யும் காவல்துறை சாமானிய பெண்களின் புகார்கள் மீது அலட்சியம் காட்டுவது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

 தொடர்ந்து பேசிய அவர், புகார் அளித்து 2 மாதங்கள் ஆகியும் குற்றவாளிகளை கண்டுபிடிக்காத காவல் துறையை நம்பாமல் தனது கட்சித் தொண்டர்கள் மூலம் தானே தனக்கு ஆபாச விடியோக்கள் அனுப்பியும், அவதூறாக விமர்சித்தும் வந்த அனைவரின் அடையாளங்களையும், வீட்டு முகவரியையும் கண்டுபிடித்து விட்டதாக கூறினார்.

மேலும், ஒரு பெண்ணின் கற்பையும், மானத்தையும் வைத்து விளையாடும் நபர்கள் யாராக இருந்தாலும், ஒரு தமிழ் பரம்பரையைச் சேர்ந்த பெண் என்ற முறையில் அவர்களை எச்சரிக்கவே தான் வீடியோ வெளியிட்டதாக கூறிய அவர், பெண்களின் மானத்திற்கும், கற்பிற்கும் களங்கள் விளைவிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை விடமாட்டோம் என தெரிவித்தார்.

 மேலும், தான் வீடியோவில் குறிப்பிட்டதைப் போல் காவல்துறை தனது புகாரின் மீது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தனக்கு ஆபாச வீடியோ அனுபியவர்களின் ஆணுறுப்பை தானே நேரடியாகச் சென்று வெட்டி வீடியோ எடுத்து அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிடுவேன் என திட்டவட்டமாக தெரிவித்தார்.

தான் வன்முறையைத் தூண்டும் முயற்சியில் பேசவில்லை என்ற அவர், பெண்களை பகடையாக்கி, பெண்கள் கற்பு மற்றும் மானத்தில் கைவைக்கும் யாராக இருந்தாலும் அவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு குறிப்பிடுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், இந்த விஷமிகள் செய்யும் செயல்கள் ஒரு பெண்ணான தன்னை அரசியலில் இருந்து அகற்றச் செய்யும் சதியா? என்ற சந்தேகமும் உள்ளது எனவும் காவல்துறை மீதும் இன்னும் தங்களுக்கு உள்ள நம்பிக்கையின் பெயரிலேயே புகார் அளித்துள்ளதாகவும், உரிய நடவடிக்கையை அவர்கள் எடுப்பார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.