" தொழில்துறையில் தமிழ்நாடு 11 -ல் இருந்து 3 -வது இடத்திற்கு முன்னேறி உள்ளது " - அமைச்சர் சி வி கணேசன்.

" தொழில்துறையில் தமிழ்நாடு 11 -ல் இருந்து 3 -வது இடத்திற்கு முன்னேறி உள்ளது "  - அமைச்சர் சி வி கணேசன்.

2025 இல் குழந்தை தொழிலாளர் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவோம் என அமைச்சர் சி.வி. கணேசன் கூறியுள்ளார். 

சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தொழிலாளர் நலத்துறை சார்பில், குழந்தை தொழிலாளர் முறை அகற்றுதல் குறித்து பல்வேறு துறை அதிகாரிகளுக்கு மாநில அளவிலான ஒருநாள் பயிற்சி பட்டறை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் கலந்துகொண்டு மேடையில் பேசினார்.

அந்த நிகழ்ச்சியில், குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவோர் மீது கடந்த ஒரு ஆண்டில், (01/04/2022 முதல் 30/04/ 2023 வரை) 321 குழந்தைகள் மீட்கப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது எனவும், மேலும் அதே நேரத்தில் 224 வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டு 48 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், என துறைசார்ந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. 

அப்போது மேடையில் பேசிய அமைச்சர் சி.வி. கணேசன்  கூறுகையில், 

இந்தியாவில் இருக்கக்கூடிய மாநிலங்களில் முதன்மை மாநிலமாக தமிழகம் உள்ளதாகவும், தொழில்துறையில் தமிழ்நாடு 11 -வது இடத்தில் இருந்து 3வது இடத்திற்கு முன்னேறி உள்ளதாகவும் தெரிவித்தார். 

மேலும், வேலை வாய்ப்பு அதிகம் உள்ள மாநிலம் தமிழகம் தான் எனவும் குறிப்பிட்ட அவர், தமிழ்நாட்டில் முந்தைய காலத்தில் அதிக குழந்தைகளை பெற்றெடுத்ததால் தான் குழந்தை தொழிலாளர் என்ற நிலை அதிகமாக இருந்தது எனவும், ஆனால் தற்போது அந்த நிலை இல்லை என்றும் கூறினார்.  மேலும், இந்த திட்டங்கள், ஓட்டிற்காக கொண்டு வந்த திட்டங்கள் அல்ல; சமூகத்தில் இந்த நிலையை தவிர்க்கவே கொண்டு வரப்பட்டது என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர்,  " நம் நாட்டில் குறிப்பாக தமிழ்நாட்டில் குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. 2025 -க்குள் குழந்தை தொழிலாளர் இல்லாத மாநிலமாக தமிழகம் உருவாக வேண்டும். காவல்துறை மற்றும் இரயில் பாதுகாப்பு துறைக்கும் தான் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களை பாதுகாக்கும் கடமை அதிகமாக உள்ளது. தொழிலாளர்களுக்கு கிடைக்க பெறும் உதவிகள் கோரிக்கைகளை நிறைவேற்ற எங்கள் துறையில் சிறப்பாக பணியாற்றி வருகிறோம்", என்றும் தெரிவித்தார்.  

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், 

முதலமைச்சர் தமிழகத்தில் 2025க்குள் குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என கூறியிருப்பதாகவும், அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். குறிப்பாக தமிழகத்தில் தற்போது குழந்தை தொழிலாளர்கள் குறைவாக தான் உள்ளனர் என்றும் குறிப்பிட்டார். 

மேலும், கல்வி வளர்ச்சி தமிழகத்தில் சிறப்பாக வளர்ந்து உள்ளது என்றும்,  மாணவர்களுக்கு இலவசமாக சீருடைகள், புத்தகப் பைகள், மதிய உணவு, சிற்றுண்டி ஆகியவை கொடுக்கப்பட்டு வருவதாகவும், .காலை சிற்றுண்டி திட்டத்தின் மூலமாக பள்ளி மாணவர்கள் வருகை அதிகரித்துள்ளது என்றும் பெருமிதம் கொண்டார். 

இதையும் படிக்க    | அமைச்சரின் உறவினர்கள் வீட்டில், 5 நாளாக தொடரும் ரெய்டு

வடமாநிலங்களில் இருந்து வரக்கூடிய குழந்தை தொழிலாளர்கள் வந்தால் கவனிக்க அனைத்து துறைகளிலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மாவட்ட அளவில் குழு அமைக்கப்பட்டு குழந்தை தொழிலாளர்களை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். அதோடு, வெளி மாநில தொழிலாளர்களை கண்டறிய குழு அமைக்கப்பட்டு கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.என்றும் கூறினார். மேலும்,  தமிழகம் முழுவதும் சுமார் 7.28 லட்சம் வடமாநில தொழிலாளர்கள் உள்ளதாக தெரிவித்தார்.

தமிழகத்திற்கு வரும் வட மாநில தொழிலாளர்களின் தகவல்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என சட்டப்படி கூற முடியாது. ஆனால், இங்கு வரும் வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் அவர்களுக்கான சலுகைகளை வழங்குவதற்கும் பணி நேரங்களில் மரணம் ஏற்பட்டால் அவர்களை சொந்த ஊருக்கு கொண்டு செல்வதற்கும் பதிவு செய்வது என்பது தேவைப்படுகிறது என கூறினார்.

இதையும் படிக்க    | "எம்பிக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, தமிழ்நாட்டிற்கு பாதகம்" திருமாவளவன்!