நீட் தேர்வுக்கு சிவப்புக் கம்பளம் விரித்தவர் எடப்பாடி தான்... அமைச்சர் மா.சுப்பிரணியன் கடும் தாக்கு...

"ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி உள்ளிட்ட இரு கல்லூரிகளை  தமிழக அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் நடவடிக்கை தொடங்க உள்ளது" 

நீட் தேர்வுக்கு சிவப்புக் கம்பளம் விரித்தவர் எடப்பாடி தான்... அமைச்சர் மா.சுப்பிரணியன் கடும் தாக்கு...
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா .சுப்பிரமணியன் சென்னை கலைஞர் நகர் அரசு மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொண்டார். கொரோனா வார்டுகளுக்கு முழு உடல் கவச உடையணிந்து சென்ற அமைச்சர் சிகிச்சையில் இருந்த கொரோனா தொற்றாளர்களிடம் உடல் நிலை குறித்து விசாரித்தார்.
 
ஆய்வின் நிறைவில்  செய்தியாளர்களை சந்தித்த அவர், 
 
கலைஞர் நகர் அரசு மருத்துவமனையில் 100 படுக்கையில் ஆக்சிஜன் வசதி செய்யப்பட்டுள்ளது. 2 கிலோ லிட்டர்  ஆக்சிஜன் சிலிண்டர் கட்டும் பணி நடைபெறுகிறது, மேலும்  அம்பத்தூர் தனியார் நிறுவனம் மூலம் ஆக்சிஜன் ஜெனரேட்டர் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. 
 
கலைஞர் நகர் அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள மாற்றுத் திறனாளிகளின் பாதிப்பு சதவீதத்தை கண்டறிந்து சான்றளிக்குப் பிரிவுக்கு தனி சாலை ஏற்படுத்தப்பட உள்ளது. கொரோனா 2ம்அலையில் இஎஸ்ஐ மருத்துவமனையில் 550 படுக்கைகளில் 150  படுக்கைகளில் கொரோனா  சிகிச்சை வழங்கப்பட்டது , இங்கு 6 கிலோ லிட்டர் ஆக்சிஜன் டேங்க் நிறுவப்பட்டது.
 
மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம்  மற்றும் மத்திய பொதுப்பணித் துறை சார்பில் 70 இடங்களில் ஆக்சிஜன் ஜெனரேட்டர் நிறுவும் பணி தொடங்கி, 20 இடங்களில்  நிறுவப்பட்டு விட்டது. 
 
தனியார் நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதி மூலம் 40 இடங்களில் ஆக்சிசன் செறிவூட்டி நிறுவப்படுகிறது.
சென்னையில்  பெரிய மருத்துவமனைகள் தவிர்த்து 100 படுக்கைகள் கொண்ட பிரிவில் கலைஞர் நகர் , அண்ணா நகர் , பெரியார் நகர் , தண்டையார் பேட்டை மருத்துவமனைகளில் 600 ஆக்சிஜன் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. 
 
3 ம் அலை பாதிப்பு ஏற்பட்டால்  சிறிய மருத்துவமனைகளிலும் கொரோனா  சிகிச்சை வழங்க போதுமான ஆக்சிஜன் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இ.எஸ்.ஐ மருத்துவமனையில் குழந்தைகளுக்கான சிகிச்சை வார்டுகள் திறக்கப்பட்டுள்ளன. இஎஸ்ஐ மருத்துவமனையில் 12 பேர் தொற்று பாதிப்புடன் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர் , அவர்களை நேரில் சந்தித்தோம்.
 
மாணவர் சேர்க்கையின் போது தகுந்த கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ள மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில்  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.  
 
ராஜா முத்தையா மருத்துவ பல்கலை உள்ளிட்ட 2 மருத்துவ பல்கலைக்கழக மாணவர்களின் கல்விக் கட்டணம் தொடர்பாக இருமுறை பேசப்பட்டுள்ளது. 2 பல்லகலைக்கழகங்களையும் அரசு ஏற்று நடத்தும் நடைமுறை விரைவில் தொடங்கும் என கூறினார். 
 
கொரோனாவில் இருந்து இன்னும் மீளவில்லை 3 ம் அலை குறித்த எச்சரித்தல் ஐசிஎம்ஆரில் இருந்து வந்து கொண்டே இருக்கிறது. தமிழகத்தில்  கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2000 க்குள் கொண்டுவரப்படும் என்றார். 
 
மத்திய தொகுப்பில் இருந்து இதுவரை 1 கோடியோ 80 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் வந்துள்ளன. தற்போது, 3 லட்சத்து 42 ஆயிரத்து 820 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. தற்போதுள்ள தடுப்பூசிகள் நாளை மதியத்திற்குள் தீர்ந்துவிட வாய்ப்பு உள்ளது. தடுப்பூசி வந்தவுடன் அரை மணி நேரத்தில் மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது. தமிழகத்தில் இலக்கை காட்டிலும் அதிக தடுப்பூசி செலுத்தியுள்ளதாக பிரதமர் பாராட்டியுள்ளார்.
 
நீட் விவகாரத்தில் மக்களை ஏமாற்றியது யார் என்பது மக்களுக்கு தெரியும். 2011 ல் நீட் அறிமுகமானபோது திமுக மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற்றது. திமுக ஆட்சியில் இருந்தவரை தமிழகத்தில் நீட் தேர்வு எட்டியே பார்க்கவில்லை. சிவப்புக் கம்பளம் விரித்து நீட்டை கொண்டு வந்து 13 மாணவர்  மரணத்திற்கு காரணமாக இருந்தவர் எடப்பாடி பழனிசாமி. 7.5 சதவீத மருத்துவ இடவொதுக்கீடு கிடைக்க காரணம் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு திமுக நடத்திய போராட்டம் தான் காரணம் என கூறினார்.