தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக கனமழை...
சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று மாலை திடீரென கனமழை பெய்துள்ளது.
சென்னையில் அடுத்து 48 மணி நேரத்தில் நகரின் சில பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் சென்னை அண்ணாசாலை, ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று மாலை கனமழை பெய்தது.
இதேபோல் திருத்தணியில் பல்வேறு இடங்களில் சாரல் மழையும் பெய்தது. காலை முதல் அனல் காற்று வீசி வந்த நிலையில் மாலையில் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக மலை பெய்து வந்த நிலையில் இன்றும் அதேபோல் கனமழை பெய்தது. திருப்பாச்சூர், கடம்பத்தூர், புதுமாவிலங்கை, பேரம்பாக்கம், பூங்கா நகர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள வெள்ளித்திருப்பூர், சென்னம்பட்டி, குருவரெட்டியூர், பிகே. புதூர், பூதப்பாடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் இன்று மாலை கனமழை வெளுத்து வாங்கியது. இதனிடையே அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தின் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.