அதிமுக பொதுச்செயலாளர் விவகாரம்...! ஓ.பி.எஸ் மனு நாளை மறுநாள் விசாரணை..!! 

அதிமுக பொதுச்செயலாளர் விவகாரம்...! ஓ.பி.எஸ் மனு நாளை மறுநாள் விசாரணை..!! 

அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான மேல் முறையீட்டு வழக்குகள் நாளை மறுதினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளபடும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க மறுத்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்று ஜேசிடி.பிரபாகர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். 

இந்த மேல் முறையீட்டு வழக்குகள் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, பன்னீர்செல்வம் அணியினர் தரப்பு வழக்கறிஞர்கள், கட்சியில் தற்போது புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடப்பதாகவும், தங்கள் ஆதரவாளர்களின் புதுப்பித்தல் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படலாம் என்பதால் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர்.

இடைப்பட்ட காலத்தில் கட்சியில் எடுக்கப்படும் முடிவுகள், இந்த வழக்குகளின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது எனத் தெரிவித்த நீதிபதி, வழக்குகளின் இறுதி விசாரணையை ஏப்ரல் 20ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

வழக்கின் இறுதி விசாரணை ஏப்ரல் 20ம் தேதிக்கு தள்ளிவைக்கப்ட்டுள்ள நிலையில் அதிமுக சார்பில் ஏப்ரல் 16ஆம் தேதி செயற்குழு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென பன்னீர் செல்வம் சார்பில் மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ண குமார் ஆஜராகி முறையிட்டார்.

இதனை அடுத்து, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு முறையீட்டை ஏற்று நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வு அதிமுக பொது செயலாளர் தேர்தல் தொடர்பான வழக்கு நாளை மறுதினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக ஒப்புதல் அளித்தனர்.