என் மீது எந்த வழக்கு வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம்- சி.வி.சண்முகம் ஆவேசம்!

சமீபகாலமாக என் மீது வழக்கு போடப் போவதாகவும் ,என்னை கைது செய்யப் போவதாகவும், ஒரு வதந்தி பரவி வருகின்றது. நான் அதற்கு தயாராக இருக்கிறேன்.

என் மீது எந்த வழக்கு வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம்- சி.வி.சண்முகம் ஆவேசம்!

திண்டிவனம் அடுத்த நல்லாலம் கூட்டுச் சாலையில் அண்ணாவின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது .

அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம்

இந்தப் பொதுக்கூட்டத்தில் முன்னாள் சட்டத்துறை அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமாகிய சி.வி.சண்முகம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர், திமுக ஆட்சி பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டு காலத்தில் மக்கள் பணிகள் ஏதும் செய்யவில்லை .மாறாக அனைத்து துறைகளிலும் கொள்ளை அடிக்கும் பணிகளை செய்து வருகின்றது. எதற்கெடுத்தாலும் ஊழல், கமிஷன் ஆகியவை அதிகமாக காணப்படுகின்றது .

நமது நாட்டை ஸ்டாலின் ஆட்சி செய்யவில்லை மாறாக அவரது குடும்ப உறுப்பினர்களே ஆட்சி செய்து வருகின்றார்கள். அவர்களுக்கு திமுகவில் இருப்பவர்கள் அனைவரும் அடிமையாக செயல்படுகிறார்கள். விழுப்புரம் அடுத்த ஏனாதிமங்களம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் முறையாகவும், தரமாகவும்  கட்டாத நிலையில் கட்டி முடிக்கப்பட்ட பத்து நாட்களிலேயே மழை நீரில் அடித்துச் சென்றுள்ளது.

இது இந்த ஆட்சியில் நடைபெறுகின்ற அவலங்களில் இதுவும் ஒன்று.  தனது குடும்பம் மட்டுமே வாழ்வதற்காக ஒரு கட்சியை நடத்துகின்றவர் ஸ்டாலின். தற்போது அமைச்சராக இருப்பவர்கள் தங்களது கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்கு புதிய நூதன முறை ஒன்றை கண்டுபிடித்து இருக்கின்றார்கள். குறிப்பாக ஒரு அமைச்சர் தனது குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் மொய்ப் பணத்தை எண்ணுவதற்காகவே  100 பணம் எண்ணும் இயந்திரத்தை வைத்து மொய்ப் பணத்தை எண்ணியுள்ளார் என்றால் அவருக்கு எவ்வளவு மொழி பணம் வந்திருக்கும் என்று நீங்களே சிந்தித்துப் பாருங்கள்.

 வழக்கை சந்திக்கத் தயார்

சமீபகாலமாக என் மீது வழக்கு போடப் போவதாகவும் ,என்னை கைது செய்யப் போவதாகவும், ஒரு வதந்தி பரவி வருகின்றது. நான் அதற்கு தயாராக இருக்கிறேன். எப்போது வேண்டுமானால் என் மீது வழக்கு போடலாம். எப்போது வேண்டுமானாலும் என்னை கைது செய்யலாம் .அதிமுகவினர்  இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்ச மாட்டார்கள்  என்றார். தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் ஆட்சியில் முறையாக வழங்கப்பட்டு வந்த ஏழை எளியவர்களுக்கான உடல் ஊனமுற்றோருக்கான ஓய்வூதியப் பணத்தை எந்த விதமான அறிவிப்பும் இன்றி பாதி பேருக்கு நிறுத்தப்பட்டுள்ளது, தமிழகத்தை ஆண்ட எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் லட்சக் கணக்கானோருக்கு ஓய்வூதிய பணத்தை கூடுதலாக வழங்க உத்தரவிட்டார்.

 ஆனால் திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட ஓய்வூதி பணத்தை நிறுத்தி வைத்திருக்கின்றார்கள்.தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பான ஆட்சியை செய்து வந்தார் என்பதற்கு இது ஒரு உதாரணம். மேலும் திமுக ஆட்சியில் விலைவாசி உயர்வு விண்ணை தொட்டுள்ளது .அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மட்டும் அல்லாமல் கட்டுமான பொருட்களான சிமெண்ட், ஜல்லி, மணல் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் இரண்டு மடங்கு விலைவாசி உயர்ந்துள்ளது. இவ்வாறு சி.வி.சண்முகம் பேசினார்.