சினிமாவில் மட்டுமல்ல... நிஜத்திலும் நடக்கும்... பெண் காவலருக்கு குவியும் பாராட்டு!
பேருந்தில் முதியவரிடம் செல்போனை பறித்து கொண்டு தப்பியோடிய திருடனை பெண் காவலர் துரத்தி பிடித்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
பேருந்தில் முதியவரிடம் செல்போனை பறித்து கொண்டு தப்பியோடிய திருடனை பெண் காவலர் துரத்தி பிடித்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
சென்னை பார்க் டவுன் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் தாமோதரன்(70). முதியவரான இவர் நேற்று திருவான்மியூரில் இருந்து ஏ1 பேருந்து மூலமாக சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்தார். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தாமோதரன் இறங்கும் போது மற்றொரு பயணி ஒருவர் சட்டை பையில் இருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பியோடினார். தாமோதரன் திருடன் என சத்தம் போட்டதால் அங்கிருந்த பொதுமக்கள் செல்போன் பறித்து கொண்டு ஓடிய நபரை துரத்தி சென்றனர். அப்போது அந்த வழியாக பணி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த ஆயுதப்படை பெண் காவலரான இந்திராணி திருடனை விரட்டி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
பிடிப்பட்ட நபரிடம் பூக்கடை போலீசார் நடத்திய விசாரணையில் வியாசர்பாடியை சேர்ந்த பாலாஜி(28) என்பதும் இவர் மீது ஏற்கனவே ஆவடி,சி. எம்.பி.டி உள்ளிட்ட காவல் நிலையங்களில் பறிப்பு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து பாலாஜி மீது வழக்குபதிவு செய்து கைது செய்தனர். துரிதமாக செயல்பட்டு திருடனை பிடித்த பெண் காவலரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.