ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நோட்டீஸ்…ஜி.எஸ்.டி ஆணையர் நீதிமன்றத்தில் விளக்கம்!

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நோட்டீஸ்…ஜி.எஸ்.டி ஆணையர் நீதிமன்றத்தில் விளக்கம்!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அனுப்பிய நோட்டீஸ் குறித்து ஒன்றிய அரசின் சரக்கு மற்றும் சேவை வரி(ஜி.எஸ்.டி) ஆணையர்  சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

நோட்டிஸ் அனுப்பிய ஜி.எஸ்.டி ஆணையர்

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், தனது படைப்புகளின் காப்புரிமையை முழுமையாக பட தயாரிப்பாளர்களுக்கு வழங்காததற்காக, 6 கோடியே 79 லட்ச ரூபாய் சேவை வரி செலுத்த வேண்டும் என, ஜி.எஸ்.டி., ஆணையர் 2019ஆம் அண்டு  நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கு

இந்த நோட்டீசை ரத்து செய்யக் கோரி கடந்த 2020 ஆண்டு பிப்ரவரியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், இசை படைப்புகளின் காப்புரிமை, பட தயாரிப்பாளர்களுக்கு நிரந்தரமாக வழங்கிய பின், அதன் உரிமையாளர்கள் அவர்கள் தான் என்றும், தன்னிடம் வரி வசூலிப்பது சட்டவிரோதம் எனவும் மனுவில் தெரிவித்திருந்தார்.

மேலும், தன் புகழுக்கு களங்கம் விளைவிக்கும்  வகையில் ஜி.எஸ்.டி. ஆணையர் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகவும், 6 கோடியே 79 லட்சம் ரூபாய் வரி செலுத்தவில்லை என கூறி, 6 கோடியே 79 லட்சம் ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவித்திருந்தார்.

ஜி.எஸ்.டி ஆணையர் நீதிமன்றத்தில் விளக்கம்

இந்த மனுவை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், ஜி.எஸ் டி.  நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஜி.எஸ்.டி. ஆணையர் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது.

 அதில், வரி ஏய்ப்பு செய்ததாக கிடைத்த ஆதாரங்களின் அடிப்படியிலேயே ஏ.ஆர்.ரகுமானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும், அவரது புகழை களங்கப்படுத்தும் நோக்கம் ஏதும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக, இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டார்.