நூற்றாண்டுகளை கடந்த கார்களின் கண்காட்சி!

குற்றாலம் சாரல் திருவிழாவில் இன்று நூற்றாண்டுகளை கடந்த கார் கண்காட்சி - சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் - மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சாரல் திருவிழா கடந்த 5ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நாள் தோறும் குற்றாலத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க மலர் கண்காட்சி மற்றும் பழக்கண்காட்சி, நாய் கண்காட்சி, கோலப்போட்டி, கொழு கொழு குழந்தை போட்டி ஆணழகன் போட்டி உட்பட பல்வேறு கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிறைவு நாளான இன்று நூற்றாண்டுகளை கடந்த கார் கண்காட்சி நடைபெற்றது.
இந்த கண்காட்சியில் 1956 - ம் ஆண்டு பயன்படுத்தப்பட்ட மார்கன், 1942-ம் ஆண்டு பயன்படுத்தப்பட்ட மோரஸ் 8, 1934-ம் ஆண்டு பயன்படுத்தப்பட்ட சார்ஜன் இண்டாள் 1947 - ம் ஆண்டு பயன்படுத்தப்பட்ட மினி மவுத், யாஸ், போர்டு ஜீப், 1944-ம் ஆண்டு பயன்படுத்தப்பட்ட டக் பேக், 1934-ம் ஆண்டு பயன்படுத்தப்பட்ட கேரவன் உட்பட 33 கார்கள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன. அதனை தொடர்ந்து கார்களின் அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பினை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், சுற்றுலாத் துறை அமைச்சர் மதி வேந்தன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
கார்களின் அணிவகுப்பு குற்றாலம் அண்ணா சிலை வழியாக காசிமேஜர்புரம், ராமலயம் வழியாக மீண்டும் புறப்பட்ட இடத்தை வந்தடைந்தது. இந்த விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆனந்த், ஆய்வாளர் கண்ணன், தி.மு.க மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன், ஒன்றிய செயலாளர்கள் அழகுசுந்தரம், அன்பழகன், வார்டு செயலாளர் சுரேஷ் , பேரூர் கழக செயலாளர் குட்டி, மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், சுற்றுலா பயணிகள் உட்பட பலர் கலந்து கொண்டு நூற்றாண்டுகளை கடந்த கார்களை பார்த்து ரசித்து மகிழ்ந்தனர்.