மின் துறை தனியார்மயமா? ஊழியர்கள் எதிர்ப்பு!

மின் துறை தனியார்மயமா? ஊழியர்கள் எதிர்ப்பு!

புதுச்சேரியில் இரண்டாவது நாளாக பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மின் துறை தனியார்மயம்

மின்துறையை தனியார் மயமாக்குவதற்கான ஒப்பந்தம் கடந்த 2 தினங்களுக்கு முன்பு கோரப்பட்டுள்ளது. இந்நிலையில் மின்துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் திரும்பப்பெறக்கோரி நேற்று முதல் புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பிராந்தியத்தில் உள்ள 2-ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடர்ந்தனர்.

ஊழியர் போராட்டத்தால் மின் தடை

மேலும் நேற்றைய தினம் பல்வேறு இடங்களில் மின் வெட்டு ஏற்பட்ட நிலையில் ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக மின் இணைப்பு கொடுக்கப்படாததால் பொதுமக்கள் ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில் மின்துறை தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 2 வது நாளாக மின்துறை தலைமை அலுவலகம் முன்பு 300 க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் மின்துறை தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். மின்துறை ஊழியர்களின் தொடர் வேலை நிறுத்தம் காரணமாக மின் கட்டணம் செலுத்துதல், மின்வெட்டி இணைப்பு உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

திரும்பப் பெறும் வரை போராட்டம்

தனியார்மயமாக்கலை திரும்பப்பெறும் வரை காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என்றும் தனியார் மயமாக்கலுக்கான டெண்டரை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். நேற்றைய தினம் அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என தெரிவித்த ஊழியர்கள் மின்வெட்டுக்கு ஊழியர்கள் காரணமாக இல்லை என்றும் தெரிவித்தனர்.