ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புடன் தொடர்புள்ள நிறுவனங்களில் திடீர் சோதனை!
அமலாக்கத்துறை சோதனை
சென்னையில் விருகம்பாக்கம், ராயபுரம், மிண்ட் ஆகிய பகுதிகளில் உள்ள 5 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. ஹவாலா பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை இந்த சோதனையை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சட்டவிரோதமாக ஹவாலா முறையில் நிதி திரட்டி தீவிரவாத இயக்கங்களுக்கு தடை செய்யப்பட்ட அமைப்புகள் வழங்கி வருவதாக சமீபத்தில் குற்றச்சாட்டு எழுந்தது. ஏற்கனவே ஹவாலா பணப்பரிமாற்றம் தொடர்பாக பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புடன் தொடர்புள்ள நிறுவனங்களை மையப்படுத்தி அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது.
ஹவாலா பணப்பரிமாற்றம்
அப்போது பயங்கரவாதச் செயல்களுக்கு உதவும் வகையில் அந்நிறுவனங்கள் சுமார் 120 கோடி ரூபாய் வரை நிதி திரட்டி, அதை வங்கிகளில் செலுத்தி இருப்பது தெரியவந்ததாக அமலாக்கத்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், அந்த தொகை உள்நாட்டிலும், வளைகுடா நாடுகளிலும் திரட்டப்பட்டு 'ஹவாலா' முறையில் பணப்பரிமாற்றம் நிகழ்ந்துள்ளது என்பதையும் அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது.
அதனைத் தொடர்ந்து ஹவாலா பணப்பரிமாற்றம் தொடர்பாக தொடர்ந்து அமலாக்கத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இன்று காலை முதல் விருகம்பாக்கம், ராயபுரம், மிண்ட் உட்பட சென்னையின் 5 இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
காலை முதல் சோதனை
ஹவாலா பணப்பரிமாற்றம் தொடர்பாகவே இந்த சோதனையும் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சோதனை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. குறிப்பாக விருகம்பாக்கம் ஷேக் அப்துல்லா நகரில் உள்ள ஷஃபியுல்லா மற்றும் நியமதுல்லா என்பவர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை 6 மணி முதல் சோதனை நடத்தி தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மின் சாதனங்கள் விற்பனை
இவர்கள் வெளிநாடுகளில் இருந்து லேப்-டாப், டெஸ்க்-டாப் போன்ற சாதனங்களை வாங்கிக் கொண்டு வந்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகின்றனர். அவர்களின் வீடுகளில் ஹவாலா பணப்பரிமாற்றம் தொடர்பாக சோதனையை அமலாக்கத் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க | பத்தே ஆண்டுகளில் அசூர வளர்ச்சி சாத்தியமானது எப்படி? வரலாற்றை மாற்றும் ஆம் ஆத்மி..! அதள பாதாளத்தில் காங்கிரஸ்..!
மேலும், 4 இடங்களிலும் ஹவாலா பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டவர்கள் இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாகவும், சோதனைக்குப் பின் முழு விபரங்கள் வெளியிடப்படும் எனவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.