நெல்லை மாநகராட்சியை கண்டித்து வியாபாரிகள் நூதன போராட்டம்!

நெல்லை மாநகராட்சியை கண்டித்து வியாபாரிகள் நூதன போராட்டம்!

சேதப்படுத்தப்பட்ட சாலைகளை சீரமைக்காமல் மெத்தனமாக செயல்படும் மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து  வியாபாரிகள் தலை கருப்பு துணியை போட்டபடி மேயரிடம் மனு அளிக்க வந்ததால் பரபரப்பு நிலவியது.

சாலைகள் சேதம்

நெல்லை மாநகராட்சி சார்பில் சீர்மிகு நகர்(ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் சுமார் 1000 கோடி ரூபாய் மதிப்பில் மாநகர் முழுவதும் பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது அதில் ஒரு பகுதியாக பாதாள சாக்கடை அமைக்கும் பணிக்காக மாநகரம் முழுவதும் போக்குவரத்து சாலைகள் உட்பட அனைத்து சாலைகளும் தோண்டப்பட்டு சரிவர சீரமைக்கப்படாததால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர்.

குறிப்பாக டவுண் சந்திப்பு, தச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகள் பல மாதங்களாக சீரமைக்கப்படாமல் இருந்து வருகிறது. இந்த நிலையில் சேதமான சாலைகளால் தங்களுக்கு வியாபாரம் பெரிதும் பாதிக்கப்படுவதாக கூறி நெல்லை ஹைரோடு வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் இன்று மாநகராட்சி மேயரிடம் மனு அளிப்பதற்காக மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது அவர்கள் சாலைகளை சீரமைக்காமல் அலட்சியமாக செயல்படும் அதிகாரிகளை கண்டிக்கும் வகையில் நூதன முறையில் தலையில் கருப்பு துணியை போட்டபடி அமைதியாக நடந்து வந்தனர். பின்னர் மேயர் அங்கு இல்லாததால் அதிகாரிகளை சந்தித்து தங்கள் கோரிக்கைகள் குறித்து முறையிட்டனர்.

மூச்சுக் கோளாறு ஏற்பட வாய்ப்பு

இது குறித்து சங்க நிர்வாகி பெர்டின் ராயன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நெல்லை தச்சநல்லூர் ஊருடையார்புரம் சாலை மற்றும் நெல்லை எஸ்.என். ஹைரோடு சாலையில் இரண்டு வருடங்களுக்கு மேலாக ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் சாலைகள் குண்டும் குழியுமாக தோண்டப்பட்டுள்ளது. பல விபத்துகள் ஏற்படுவதுடன் பொதுமக்களுக்கு மூச்சு கோளாறு பிரச்சினை வருகிறது. சாலை மோசமாக இருப்பதால் வணிகர்களுக்கு வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது மனு அளித்த பிறகும் சாலையை சீரமைக்காவிட்டால் அனைத்து வணிகர் சங்கங்களையும் ஒன்றிணைத்து மாபெரும் உண்ணாவிரதம் மற்றும் சாலை மறியல் நடத்துவோம்.

கொரோனா ஊரடங்குக்கு பிறகு மீண்டு வந்தாலும் வரி கட்டுவதற்கு கூட கடன் வாங்க கூடிய சூழலில் இருக்கிறோம். சாலை மோசமாக இருப்பதால் வணிக பொருட்கள் கொண்டு வந்து செல்வதில் சிரமம் உள்ளது வாடிக்கையாளர்களும் இந்த சாலைகளை புறக்கணிக்கிறார்கள் என்று தெரிவித்தார்.