எல்லை தாண்டினால் நிச்சயம் நடவடிக்கை... இந்தியாவுக்கு எச்சரிக்கை விடும் இலங்கை அமைச்சர்... 

எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பில் நுழையும் இந்திய மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்படும் என, இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எல்லை தாண்டினால் நிச்சயம் நடவடிக்கை... இந்தியாவுக்கு எச்சரிக்கை விடும் இலங்கை அமைச்சர்... 

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, கடந்த இரண்டு நாட்களில் தமிழக மீனவர்கள் 69 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்த சம்பவம், மீனவ கிராமங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், கைது செய்யப்பட்ட மீனவர்களை சந்தித்தனர். அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய உதவிகளை செய்த அவர்கள், சட்ட ரீதியான உதவிகளையும் செய்துள்ளனர். இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை விரைவாக விடுவிக்க வேண்டும் என, இலங்கை அரசிடம் இந்திய தூதரகம் வலியுறுத்தி உள்ளது.

இந்நிலையில், யாழ்ப்பாணம் - மயிலிட்டி துறைமுகத்தில் ஆய்வு செய்த இலங்கை கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அங்கு பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்திய மீன்பிடி படகுகளை பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கை கடல் வளம் மற்றும் கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில், எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பில் நுழையும் இந்திய மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சட்ட ரீதியாக படகுகள் அரசுடைமையாக்கப்படும் என குறிப்பிட்டுள்ள டக்ளஸ் தேவானந்தா, சீன தூதுவரின் இலங்கை பயணத்திற்கும், தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கூறியுள்ளார்.