புதினின் அரசியல் விமர்சகர் இந்தியாவில் மரணம்...விபத்தா? தற்கொலையா?

புதினின் அரசியல் விமர்சகர் இந்தியாவில் மரணம்...விபத்தா? தற்கொலையா?

ஒடிசாவின் ராய்காட்டில் இருந்து அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.  இந்தியாவில் சுற்றுலாவிற்காக இங்கு வந்த இரண்டு ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் ஒரே வாரத்தில் இரண்டு நாள் இடைவெளியில் இறந்துள்ளனர்.  

புதினின் விமர்சகர்:

ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் ஆதரவுக் கட்சியுடன் பாவெல் அன்டனோவ் தொடர்புடையவராக இருந்த பின்னரும் உக்ரைனுடனான போர் தொடங்கியது முதல், பல சந்தர்ப்பங்களில் பாவெல் புதினை விமர்சித்துள்ளார்.  அன்டோனோவ் ரஷ்யாவின் கட்சியின் ஆதரவான கட்சியை சேர்ந்த எம்.பி மற்றும் 2019 இல் ரஷ்யாவின் அதிக சம்பளம் வாங்கும் அரசியல்வாதியும் ஆவார்.  அவர் அவரது 65வது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக இந்தியா வந்திருந்தார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்யாவின் சிறப்பு மிக்க அரசியல்வாதியான பாவெல் அன்டோனோவ் ஒடிசாவில் உள்ள ஹோட்டலில் உள்ள தனது அறையின் ஜன்னலில் இருந்து விழுந்து இறந்ததாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.  இவரது மரணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக அவரது நண்பர் இந்தியாவில் நடந்த பார்ட்டியின் போது மாரடைப்பால் இறந்துள்ளார். 

விபத்தா? தற்கொலையா?:

உள்ளூர் காவலர்களின் கருத்துப்படி, ஹோட்டலின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து அன்டோனோவ் இறந்ததாக தெரியவந்துள்ளது.  65 வயதான பாவெல் அன்டோனோவ் சனிக்கிழமை ஹோட்டலுக்கு வெளியே இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.  மேலும் அவருடன் பயணம் செய்த சக பயணியான விளாடிமிர் பிடெனோவ் அதற்கு இரண்டு நாள் முன்னதாக ஹோட்டலில் இறந்து கிடந்துள்ளார்.  ஹோட்டலின் முதல் தளத்தில் உள்ள அவரது அறையில் மயங்கிய நிலையில் கிடந்த விளாடிமிர் பிடெனோவ், சில காலி மதுபாட்டில்களை வைத்திருந்ததாகவும் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, ​​அவர் இறந்துவிட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர் என உள்ளூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மன உளைச்சல் காரணமா?:

விளாடிமிர் மற்றும் பாவெல் நான்கு பேர் கொண்ட ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் ஒரு பகுதியாக இருந்ததாகவும் அவர்கள் தங்கள் வழிகாட்டியான ஜிதேந்திர சிங்குடன் புதன்கிழமை ராய்காட் நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.  மேலும் பாவெலின் மரணம் குறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில் இது தற்கொலையாகத் தெரிவதாக கூறியுள்ளார்.  அதற்கு காரணமாக பாவெல் அவரது நண்பரின் மரணத்தால் மன உளைச்சலில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.  இவர்களின் மரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  விலை நிர்ணயம் செய்யப்பட்ட கொரோனா தடுப்பூசி!!