ரஷ்யா மீது பொருளாதாரத் தடை... சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை திடீர் உயர்வு!!
அமெரிக்காவின் ரஷ்யா மீதான பொருளாதாரத் தடை விதிப்பின் எதிரொலியாக, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை திடீரென உயர்ந்துள்ளது.
கிழக்கு உக்ரைனின் இரு பகுதிகளை தனிக் குடியரசாக அங்கீகரித்த ரஷ்ய அதிபர் புதின், அமைதி காக்கும் பணிக்காக அங்கு ராணுவம் விரையும் என்றார். இதையடுத்து ரஷ்யா மீது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள், பொருளாதாரத் தடைகளை விதித்தன.
இதனால் எரிசக்தி ஏற்றுமதியில் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்தில் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை திடீரென அதிகரித்தது. 96 புள்ளி 71 டாலராக இருந்த ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 99 புள்ளி 50 டாலராக உயர்ந்தது. இது 2014-ம் ஆண்டுக்குப் பின் நடந்துள்ள மிகப் பெரிய விலை உயர்வாகும்.
இந்தநிலையில், மேற்குலக நாடுகள் பொருளாதாரத் தடைகள் ரஷ்யாவின் வங்கிகள் தொடர்பானது மட்டுமே என்றும் எரிசக்தி விநியோகத்தை பாதிக்காது என்றும் அமெரிக்கா தெளிவுபடுத்தியுள்ளது. இதையடுத்து கச்சா எண்ணெய் விலை மீண்டும் குறையும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் அணு சக்தி ஒப்பந்தத்தை புதுப்பிப்பது தொடர்பான நடவடிக்கையை அமெரிக்கா மீண்டும் தொடங்கியுள்ளதால் ஈரான் கச்சா எண்ணெயும் சந்தைக்கு வர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.