ரஷ்யா மீது அடுத்தடுத்து விதிக்கப்படும் தடைகள்... அதிரடி பதிலடி தடைகளை அறிவிக்கும் அதிபர் புதின்!!

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவிற்கான வாக்குரிமையை ரத்து செய்ய வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.

ரஷ்யா மீது அடுத்தடுத்து விதிக்கப்படும் தடைகள்... அதிரடி பதிலடி தடைகளை அறிவிக்கும் அதிபர் புதின்!!

உக்ரைன் மீதான தாக்குதலைத் தொடங்கியது முதல் ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறது. அதற்குப் பதிலடியாக சம்பந்தப்பட்ட நாடுகள் மீது ரஷ்ய அதிபர் புதினும் பல்வேறு தடைகளை அறிவித்து வருவதுடன் உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளார்.

உக்ரைனை நான்கு திசைகளில் இருந்தும் தாக்கும் ரஷ்ய ராணுவம், தற்போது ஏவுகணைகளையும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. எண்ணெய் கிடங்குகள், எரிவாயுக் குழாய்களை தகர்க்கும் ஏவுகணைகள், குடியிருப்புப் பகுதிகளையும் பதம் பார்த்து வருகின்றன.

இது மிருகத்தனமான செயல் என்று குற்றம் சாட்டியுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, இது ரஷ்யா உக்ரைனில் நடத்தும் இனப்படுகொலை என்று குற்றம் சாட்டியுள்ளார். உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரான கார்கிவில், ரஷ்ய ராணுவ வீரர்கள் கொள்ளையடிப்பதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய அத்துமீறல் தொடர்பாக சர்வதேச நீதிமன்றம் தலையிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவிற்கு உள்ள வாக்குரிமையை ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இதனிடையே, உக்ரைன் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், புதினுக்கு வழங்கப்பட்டிருந்த கவுரவத் தலைவர் மற்றும் ஜூடோ சம்மேளனத் தூதர் பதவிகளை திரும்பப் பெறுவதாக சர்வதேச ஜூடோ சம்மேளனம் அறிவித்துள்ளது.