குரங்கம்மை ஒரு பெருந்தொற்றா?.. 18ம் தேதி அவசர ஆலோசனை கூட்டம்!!

குரங்கம்மையை பெருந்தொற்றாக அறிவிப்பது தொடர்பாக முடிவெடுக்க அடுத்த கட்ட அவசர ஆலோசனைக் கூட்டம் வரும் 18-ம் தேதி அல்லது அதற்கு முன்பாக நடைபெறும் என்றுஉலக சுகாதார துறை அமைப்பு தெரிவித்துள்ளது.

குரங்கம்மை ஒரு பெருந்தொற்றா?.. 18ம் தேதி அவசர ஆலோசனை கூட்டம்!!

குரங்கம்மை நோய்ப் பரவலில் அதிக உயிரிழப்புகள் இல்லை என்றாலும் சர்வதேச பாதுகாப்புக்காக பொது சுகாதார அவசர நிலை பிறப்பிக்கலாமா என்பது குறித்து கடந்த 27-ம் தேதி உலக சுகாதார அமைப்பு ஆலோசனை நடத்தியது. அதில், ஐரோப்பாவில் அதிக அளவில் குரங்கம்மை பரவி வருவது கவலை அளித்தாலும் பெருந்தொற்றாக அறிவிக்க வேண்டிய உடனடி அவசரத் தேவை எழவில்லை என முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், ஆப்பிரிக்காவுக்கு வெளியே சுமார் 50 நாடுகளில் இதுவரை 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குரங்கம்மை பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம், கடந்த இரண்டு வாரங்களில் உலகளவில் பதிவான குரங்கம்மை வழக்குகள் கிட்டத்தட்ட 30 சதவீதம் அதிகரித்துள்ளது கவலை தருகின்றது என்றார். அதனால் அடுத்த கட்ட அவசர ஆலோசனைக் கூட்டம் அவசியம் என்றும் வரும் 18 அல்லது அதற்கு முன்பாகவே கூட்டம் நடத்தப்பட்டு அவசர நிலை பிறப்பிப்பது குறித்து அறிவிக்கப்படும் என்றும் அதானோம் தெரிவித்துள்ளார்.