இலங்கையில் மீண்டும் அவசரநிலை பிரகடனம்

இலங்கையில் மீண்டும் அவசரநிலை பிரகடனம்

மீண்டும் அவசர நிலை பிரகடனம் செய்து இலங்கையின் இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கே உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி சூழலுக்கு தீர்வு காணாத ஆட்சியாளர்களை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தை அரங்கேற்றி வருகின்றனர். இந்த போராட்டத்தால் அதிர்ந்து போன முன்னாள் அதிபர் கோத்தபய வெளிநாடு தப்பியதோடு தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே ஏற்படுத்தப்பட்டுள்ளார். இந்தப் போராட்டமானது 100 நாளை தொட்டுள்ள நிலையில், நாட்டின் ஒட்டுமொத்த அரசு அமைப்பையும் மாற்றும் வரை போராட்டத்தை தொடரும் என போராட்டக்காரர்கள் சூளுரைத்துள்ளனர்.

இந்தநிலையில் இலங்கையில் சட்டம் ஒழுங்கை பாதுகாத்திடவும், அத்தியாவசிய பொருட்களின் விநியோகம் தடைப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவும் இன்று முதல் மீண்டும் காலவரையற்ற அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. பொதுப் பாதுகாப்பு கட்டளை சட்டத்தின் 2 ஆவது பிரிவின் கீழ் இந்த அவசர நிலையை ரணில் விக்ரமசிங்கே பிறப்பித்துள்ளார்.