விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் விசிக கட்சியினர் 9 நபர்கள் மீது வேளச்சேரி போலீசார் எட்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு.2011 ம் ஆண்டு கொலை முயற்சி வழக்கின் ஆவணங்கள் தொலைந்ததால் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மீண்டும் வழக்கு பதிவு.
சென்னை நந்தம்பாக்கத்தைச் சேர்ந்த வேதா அருண் நாகராஜன். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு விடுதலைச் சிறுத்தை கட்சி அலுவலகத்திற்கு சென்ற பொழுது வீரப்பன் என்பவரும் அவரது ஆதரவாளர்கள் என பத்து நபர்கள் சேர்ந்து தன்னை தாக்கியதாகவும் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தூண்டுதல் பெயரில் தான் தன்னை தாக்கியதாக நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இது தொடர்பாக நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகார் பின்பு வேளச்சேரி காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.
இந்த புகார் தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், வீரப்பன் உள்ளிட்டோருக்கு எதிராக கொலை முயற்சி, ஆபாசமாக பேசுதல், அடித்துக் கொடுங்காயத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கில் மேல் நடவடிக்கை இல்லை என்பதால் புகார்தாரர் அருண் வேதா நாகராஜன் உயர் நீதிமன்றத்தை நாடினார். விசாரண நடத்திய உயர்நீதிமன்றம் 10 ஆண்டுகளாக வழக்கில் முன்னேற்றம் இல்லாததை சுட்டிக்காட்டி சைதாப்பேட்டை நீதிமன்றம் மீண்டும் இது குறித்து விசாரிக்க உத்தரவிட்டது.
நீதிமன்ற விசாரணையில் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களோ மற்ற விவரங்களோ எதுவும் காவல் நிலையத்தில் இல்லை என தெரியவந்தது.
அதனால் சைதாப்பேட்டை 18 வது நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணி அதே புகாரியில் மீண்டும் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார். அதன்படி வேளச்சேரி காவல் நிலையத்தில் ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல், கொடுங்காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வி.சி.க தலைவர் திருமாவளவன் உட்பட ஒன்பது நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.மேலும், இந்த சம்பவம் குறித்து வேளச்சேரி போலீசார் தற்போது விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர்.