கர்நாடகாவில் முதலீடு செய்ய வருமாறு டெஸ்லா நிறுவனத் தலைவர் எலான் மஸ்க்கிற்கு அம்மாநில தொழில்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் அழைப்பு விடுத்துள்ளார்.
அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள இந்திய பிரதமர் மோடி அங்கு பல்வேறு நிறுவனங்களில் தலைமை அதிகாரிகள் மற்றும் தொழில் அதிபர்களை சந்தித்து உரையாடினார். மேலும் அவர்களை இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பும் விடுத்தார். அதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடியை டெஸ்லா நிறுவன தலைவர் எலன் மஸ்க் சந்தித்தபோது, இந்தியாவில் டெஸ்லா நிறுவனத்தை நிறுவுவதில் நம்பிக்கையாக இருக்கிறேன் என கூறியிருந்தார்.
இதனையொட்டி கருத்து தெரிவித்துள்ள, கர்நாடக மாநிலத்தின் தொழில்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், "இந்தியாவில் டெஸ்லா தனது நிறுவனத்தை அமைக்க விரும்பினால் கர்நாடக மாநிலம், அந்நிறுவனத்தை இருகரம் நீட்டி அழைக்கிறது. மேலும், எலான் மஸ்க் விரும்பினால் ஸ்டார் லிங்க் நிறுவனத்தையும் பெங்களூருவில் அமைக்கலாம். இந்தியாவில் டெஸ்லா தனது தொழிலை விரிவுபடுத்த கர்நாடகாவை விட சிறந்த மாநிலம் இருக்காது" என்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.