செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கில் Google யை மேற்கோள் காட்டி நீதிபதி கூறிய தீர்ப்பு...!

செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம் கூகுல் கூறுவதாக கூறி தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த 2011 முதல் 2015 ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, 2014 ஆம் ஆண்டு போக்குவரத்து துறையில் நடைபெற்ற ஆட்சேர்ப்பு பணியில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்ததாக தொடரப்பட்ட  வழக்கில் அமைச்சா் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார். அப்போது திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலியால் அவருக்கு  அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து புழல் சிறையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அண்மையில் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதனிடையே, செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமின் மனு முதலில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அடுத்ததாக, மருத்துவ காரணங்களை சுட்டிக்காட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், உயர்நீதிமன்றத்திலும் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையும் படிக்க : முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கு சிறை தண்டனை ரத்து...!

இப்படி இரண்டு முறை தள்ளுபடி செய்யப்பட்ட நிலையிலும், செந்தில் பாலாஜி தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில் செந்தில் பாலாஜியின் மருத்துவ அறிக்கை மற்றும் எம்.ஆர்.ஐ ஸ்கேன் பரிசோதனை அறிக்கை உள்ளிட்டவை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் பெலா திரிவேதி, சதீஷ் சந்திர வர்மா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறையிலுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்க உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் மறுப்பு தெரிவித்ததோடு, மருத்துவ காரணங்களுக்காக அல்லாமல் தகுதியின் அடிப்படையில் மட்டுமே ஜாமின் மனுவை பரிசீலிக்க முடியும் என்று கூறியுள்ளனர். அத்துடன், தற்போது பை பாஸ் சர்ஜரி அப்பண்டிக்ஸ் சிகிச்சை போல சாதாரணமாகிவிட்டது என்றும், Chronic பிரச்சனைகளை மருந்துகளால் தீர்க்க முடியும் என Google கூறுகிறது என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், கீழமை நீதிமன்றத்தில் வழக்கமான ஜாமின் மனுவை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியதால், செந்தில் பாலாஜி தரப்பு ஜாமின் மனுவை திரும்ப பெற்று கொண்டது.

வழக்கம்போல், இந்த முறையும் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவில் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்கவில்லை குறிப்பிடத்தக்கது.