தஞ்சாவூர்மாவட்டம் பட்டுக்கோட்டை பெருமாள் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீபிரியா. இவர் ஒரு தனியார் பள்ளியில் வேலை பார்த்து வருகிறார். இவரது கணவர் பழனிவேல் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். மகன் சுரேந்தர் சென்னையில் படித்து வருகிறார்.
இந்த நிலையில் ஸ்ரீபிரியா நேற்று காலை 9 மணி அளவில் வீட்டின் கதவுகளை பூட்டி விட்டு பள்ளிக்கு சென்று விட்டார். மீண்டும் மாலை ஏழு மணிக்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு மற்றும் உள் கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டு வீட்டில் உள்ள பீரோவில் இருந்த 40 பவுன் நகைகள், வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூபாய் இரண்டு லட்சம் ரொக்கப் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதனை அடுத்து ஸ்ரீபிரியா பட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார் புகாரின் பேரில் பட்டுக்கோட்டை டிஎஸ்பி செங்கமல கண்ணன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்த பொழுது கொள்ளையர்கள் விட்டுச் சென்ற ஒரு செல்போன் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை போலீசார் கைப்பற்றி மர்ம நபர்களை தேடி வருகின்றனர். பட்டப்பகலிலேயே இந்த கொள்ளை சம்பவம் நடந்திருப்பது பட்டுக்கோட்டை பகுதியில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.