மேயர் வீட்டின் அருகே... மனைவியின் கண்முன்னே முதியவருக்கு நேர்ந்த கொடூரம்!

மேயர் வீட்டின் அருகே... மனைவியின் கண்முன்னே முதியவருக்கு நேர்ந்த கொடூரம்!

மதுரையில் பட்டப்பகலில் மேயரின் வீட்டின் அருகே முதியவரை வீடு புகுந்து வெட்டி படுகொலை செய்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. 

மதுரை மாநகராட்சி மேயரின் வீட்டின் அருகேயுள்ள யோகனந்தசுவாமி மடம், தெற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் பொங்குடி. இவர் அவரது மனைவி பாண்டியம்மாளுடன் வீட்டில் வசித்துவருகிறார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணமான நிலையில் கணவன் மனைவி இருவர் மட்டும் சொந்த வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
 
இன்று மதியம் பொங்கொடியின் வீட்டிற்கு வந்த இரண்டு இளைஞர்கள், திடீரென தாங்கள் வைத்திருந்த அரிவாளால் பொங்குடியை வெட்டியுள்ளனர். அப்போது வீட்டில் இருந்த அவரது மனைவி பாண்டியம்மாள் கூச்சலிட்ட நிலையிலும் அவரையும் கத்தியை காட்டி மிரட்டிய இளைஞர்கள் சரமாரியாக பொங்குடியை வெட்டிவிட்டு தப்பியோடினர். இதனால் இளைஞர்கள் வெட்டியதில் படுகாயம் அடைந்த பொங்கொடி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
 
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கரிமேடு காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் கொலை சம்பவம் நடைபெற்ற பகுதியில் கைரேகை நிபுணர்கள் தடயங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். 

மதுரையில் பட்டப்பகலில் வீட்டிற்குள் இருந்த முதியவரை இளைஞர்கள் இருவர் மனைவியின் கண் முன்பாக வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை ஏதேனும் முன் விரோதமா இல்லை ஆள் மாற்றி கொலை செய்தார்களா? என்பது குறித்து காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் ஆய்வாளர் இத்ரீஸ் தலைமையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
இதையும் படிக்க: இடியாப்ப சிக்கலில் ஆம்னி பேருந்து விவகாரம்... சொந்த ஊரிலிருந்து சென்னை திரும்புவோர் பாதிப்பு!