கழிவுநீர் தேக்கத்தொட்டியில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு; வெளியான திடுக்கிடும் செய்திகள்!

கழிவுநீர் தேக்கத்தொட்டியில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு; வெளியான திடுக்கிடும் செய்திகள்!

தென்காசி: தென்காசியில், ஒரு வீட்டின் கழிவுநீர் தேக்கத்தொட்டியில், இளைஞரின் எலும்பு கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம், இலத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கல்லூரி மாணவர் மாடசாமி என்கிற மது. இவர் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு காணாமல் போனதாக கூறப்படுகிறது. அது தொடர்பான வழக்கு இலத்தூர் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், கடந்த ஞாயிற்று கிழமையில், அதே பகுதியை சேர்ந்த நாராயணன் என்பவரது வீட்டின் கழிவுநீர் தேக்கத்தொட்டியில் எலும்பு கூடு ஒன்று கண்டெடுக்கப்பட்டதும், தகவலிருந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அதன் பிறகு  நடத்திய டிஎன்ஏ சோதனையில், அது 7 மாதங்கள் முன்பு காணாமல் போன மது உடல் என்பது தெரிய வந்தது.

மது காணாமல் போன நாள் முதல், வேறு யாரும் அப்பகுதியை விட்டு வெளியேறினார்களா என போலீசார் விசாரித்த நிலையில், அங்கு வசித்த 3 பேர் குடும்பத்துடன் கோவைக்கு வேலைக்கு சென்றது தெரிய வந்தது.  ஒரு வேளை இவர்களுக்கும் மதுவின் கொலைக்கும் சம்பந்தம் இருக்கலாம் என சந்தேகப்பட்ட போலீசார் அவர்களிடம் விசாரணையை தொடங்கினர். 

மாரியம்மாள், பேச்சியம்மாள் மற்றும் அவரது சகோதரர் உள்ளிட்ட மூவரிடமும் விசாரணை செய்ததில் பல திடுக்கிடும் செய்திகள் வெளியாகியது. கல்லூரி மாணவரான  மதுவுக்கும், அவரது வீட்டின் எதிரே உள்ள திருமணமான பேச்சியம்மாள் என்வருக்கும் இடையே காதல் மலர்ந்த நிலையில், இருவரும் அவ்வப்போது தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. அதனை  மது தனது செல்போனில் வீடியோவாக எடுத்து வைத்து கொண்டு பேச்சியம்மாளை மிரட்டியுள்ளதும் தெரியவந்துள்ளது.

ஒரு கட்டத்தில், மதுவின் தொந்தரவு அதிகரித்த நிலையில், பேச்சியம்மாள் தனது வாழ்கை பாழாகிவிடுமோ என எண்ணி, தனது தயார் மரியம்மாளிடம் கூறியுள்ளார்.பின்னர், இருவரும் சேர்ந்து மதுவை வீட்டிற்கு வர வைத்து, கைகளை கட்டி, முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி கொலை செய்துள்ளனர். பின்னர் பேச்சியம்மாள், தனது தாயார் மாரியம்மாள் மற்றும் அவரது சகோதரர் மூவரும் சேர்ந்து, மதுவின் சடலத்தை, கழிவுநீர் தேக்கத்தொட்டியில் போட்டுவிட்டு, கோவைக்கு தப்பியது தெரிய வந்துள்ளது. 

விசாரணைக்குப் பின்னர், மூவரையும் கைது செய்த போலீசார், செங்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.