சென்னை பெரம்பூரில் மரத்திலிருந்து வேப்பிலையை பறிக்க முயன்றபோது, வீட்டின் 2வது மாடியிலிருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெரம்பூர் திரு.வி.க தெருவைச் சேர்ந்தவர் ராஜு. இவர் இப்பகுதியில் கடந்த 8 ஆண்டுகளாக வசித்து வந்த நிலையில், கட்டிட தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணமான நிலையில், ராஜுவும், லட்சுமியும் வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், வீட்டிற்கு வந்த உறவினர் மாலா என்பவரின் உதவியுடன், 2வது மாடியில் இருந்து ராஜு வீட்டருகே இருந்த வேப்ப மரத்தின் கிளையை உடைப்பதற்காக முயற்சி செய்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி இருவரும் 2 வது மாடியில் இருந்து கீழே தவறி விழுந்தனர். இதில் சம்பவ இடத்திலேயே ராஜு மண்டை உடைந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
உறவினரான மாலா-விற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதில் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்த ராஜு-வின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து செம்பியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.