2022-2023 ஆம் ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு கடந்த 19 ஆம் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவு பெறுகிறது. குறிப்பாக, 19 ஆம் தேதி சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்றது.
சிறப்பு பிரிவில் உள்ள முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு 11 இடங்கள், விளையாட்டு வீரர்களுக்கு 8 இடங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 46 என மொத்தம் 65 இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெற்றது.
அதனை தொடர்ந்து, 20 ஆம் தேதி 7.5% உள் இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது, இந்த கலந்தாய்வில் 1100 மாணவர்கள் கலந்து கொண்ட நிலையில் அதில் 565 இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.
மேலும், மாணவர்கள் தங்களுக்கு தேவையான இடங்களை தேர்வு செய்த பிறகு சிறப்பு பிரிவு மாணவர்கள் மற்றும் 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் உள்ள அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டு ஆணையம் வழங்கப்பட்டது.
மேலும், பொதுப்பிரிவு மாணவர்களுக்கு இணையதளம் வாயிலாக 19 ஆம் தேதியிலிருந்து கலந்தாய்வு நடைபெற்று வரும் நிலையில் இன்றுடன் அந்த கலந்தாய்வு நிறைவு பெறுகிறது. அதன் பிறகு 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற இருக்கிறது.