“கொரோனா காலத்தில் வணிகம் நடைபெறாததால் கடைகளின் குத்தகை, வாடகை தள்ளுபடி” - தமிழக அரசு விளக்கம்

“கொரோனா காலத்தில் வணிகம் நடைபெறாததால் கடைகளின் குத்தகை, வாடகை தள்ளுபடி” - தமிழக அரசு விளக்கம்

கொரோனா ஊரடங்கு காலத்தில் கடைகள் மூடப்பட்டதால், நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான கடைகளின் வாடகை, குத்தகை தொகை 136 கோடி ரூபாயை தள்ளுபடி செய்துள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் 2020 ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலும்; 2021 மே, ஜூன் மாதங்களிலும் கடைகள் முழுமையாக மூடப்பட்டன. இந்த காலகட்டத்தில் வணிகம் நடைபெறாத காரணத்தால், கடைகளுக்கான வாடகை, குத்தகையை தள்ளுபடி செய்ய வேண்டுமென உத்தரவிடக் கோரி, நாமக்கல் நகராட்சிக்கு சொந்தமான கடையை வாடகைக்கு எடுத்து நடத்தி வந்த பொன்னுசாமி என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கடைகளுக்கான வாடகை, குத்தகையை தள்ளுபடி செய்யும்படி  2021 டிசம்பரில் உத்தரவு பிறப்பித்திருந்தது. 

இந்த உத்தரவை அமல்படுத்தாமல் நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே அவமதித்து விட்டதாக கூறி, தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர், வருவாய் துறை செயலாளர், நகராட்சி நிர்வாக துறை இயக்குனர் மற்றும் நாமக்கல் நகராட்சி ஆணையருக்கு எதிராக பொன்னுசாமி நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆர். சுரேஷ்குமார் முன் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசுத்தரப்பில், கொரோனா ஊரடங்கு காலத்தில் கடைகள் மூடப்பட்டதால், மாநகராட்சி, நகராட்சி போன்ற நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான கடைகளுக்கான  136 கோடியே 44 லட்சத்து 34 ஆயிரத்து 828 ரூபாய்  வாடகை மற்றும் குத்தகை தொகைகளை தள்ளுபடி செய்து 2023 ஜூன் மாதம் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

வாடகை மற்றும் குத்தகை பாக்கி இல்லாதவர்களுக்கு மட்டும் இந்த சலுகை வழங்கப்படும் எனவும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அரசாணையை ஆய்வு செய்த நீதிபதி, நீதிமன்ற உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறி,  நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிக்க   |  ஹோம் வொர்க் செய்யாத மாணவியின் கையை முறித்த ஆசிரியை!