கடந்த 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை உயர்வை நோக்கியே பயணித்து வந்தது. ஒவ்வொரு நாளும் புதிய உச்சம் என்று இருந்து வந்த தங்கத்தின் விலை, கடந்த 2020-ம் ஆண்டு ஒரு பவுன் 43 ஆயிரத்து 328-ரூபாய்க்கு விற்பனை ஆனது. இது தான் தங்கம் விலையில் இதுவரை வரலாறு காணாத உச்சமாக பார்க்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தங்கம் விலையில் அவ்வப்போது சற்று சரிவை பார்க்க முடிந்தது. தொடர்ந்து சரிந்து கொண்டே வந்த தங்கத்தின் விலை, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 4-ந்தேதி மீண்டும் உயரத் தொடங்கியது. அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக உயரத் தொடங்கிய தங்கம் விலை, மீண்டும் குறையத்தொடங்கியது.
இப்படி தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை, இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு பவுன் தங்கம் ரூ36 ஆயிரத்து 472 என்ற நிலையிலிருந்து, சற்று ஏற்ற, இறக்கத்துடனேயே நீடித்து வந்தது.
இந்நிலையில் உக்ரைன் மீது ரஷியா எந்த நேரத்திலும் போர் தொடுக்கலாம் என்ற சூழல் நிலவி வந்ததால், கடந்த வாரத்தில் இருந்து தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கியது. அதேபோன்று நேற்று உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்த தொடங்கிய சில மணி நேரத்திலேயே தங்கம் விலையில் பெரிய மாற்றம் காணப்பட்டது. அதன்படி பவுனுக்கு ரூ.1,856 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.39 ஆயிரத்து 608-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை நேற்று ஒரே நாளில் மட்டும் பவுனுக்கு ரூ.1,856 உயர்ந்தது.
அதற்கு பிறகு ரஷியா மீது கூடுதல் பொருளாதார தடை விதித்ததன் எதிரொலியாக தற்போது, தங்கம் மற்றும் வெள்ளி விலையில் சற்று மாற்றம் ஏற்பட்டுள்ளது. 22 காரட் ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.1136 குறைந்து ரூ.38,472-க்கும், வெள்ளி கிராமுக்கு ரூ.2.70 சரிந்து ரூ.70க்கும் விற்பனையாகிறது. மேலும் ரஷியா மீது விதித்த பொருளாதார தடையின் எதிரொலியாக தற்போது தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறைந்துள்ளது.