2047-ம் ஆண்டுக்குள் புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும்...முர்மு உரை!

2047-ம் ஆண்டுக்குள் புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும்...முர்மு  உரை!

விடுதலை நாள் நூற்றாண்டான 2047ம் ஆண்டுக்குள் புதிய இந்தியாவை உருவாக்க வேண்டுமென நாடாளுமன்ற கூட்டத்தொடரில் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.


நடப்பாண்டின் முதல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் இன்று தொடங்கியது. அப்போது பேசிய அவர், சர்வதேச அளவில் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளதாகவும், தற்சார்பு பாரதம் என்ற இலக்கை இந்தியா அடைய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

டிஜிட்டல் இந்தியா முன்னெடுப்பின் மூலம் டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரித்துள்ளதாகக் கூறிய குடியரசுத்தலைவர், இந்தியாவின் அனைத்து மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி உருவாக்கப்படுவதாகவும் கூறினார். ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் கடந்த 3 ஆண்டுகளில் 11 கோடி பேர் பயன் பெற்றதாகவும் இலவச மருத்துவக் காப்பீடு மூலம் 50 கோடி பேர் பயன் பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

புதிதாக 90 ஆயிரம் புத்தாக்கத் தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு, தொழில் புரட்சி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார். வறுமை இல்லாத செழிப்பான இந்தியாவாக நாட்டை மாற்ற பெண்களும் இளைஞர்களும் முன்நிற்க வேண்டும் எனவும், ஊழலே ஜனநாயகத்தின் மிகப்பெரிய எதிரி எனவும் அவர் குறிப்பிட்டார். கடந்த 9 ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் குறைந்துள்ளது எனவும் குடியரசுத்தலைவர் கூறினார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com