முதல் குரங்கு அம்மை காய்ச்சலைப் பதிவு செய்தது இந்தியா:

முதல் குரங்கு அம்மை காய்ச்சலைப் பதிவு செய்தது இந்தியா:

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியா திரும்பிய கேரளாவின் கொல்லம் பகுதியைச் சேர்ந்த நபருக்கு குரங்கு அம்மை காய்ச்சல் அறிகுறி இருந்ததால் அவர் தனிமைப்படுத்தப்பட்டார்.  மேலும் அவருடன் தொடர்பில் இருந்த நபருக்கு குரங்கு அம்மை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது.  அதனால் உடனடியாக அவருடைய இரத்த மாதிரி ஆய்வுக்காக புனேவில் உள்ள தேசிய வைராலஜி ஆய்வு மையத்துக்கு அனுப்பபட்டது.  அதன் முடிவு இன்று அறிவிக்கப்பட்டது.  அவருக்கு நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது.  இதன்மூலம் இந்தியாவின் முதல் குரங்கு அம்மை காய்ச்சல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முதலில் குரங்கு அம்மை காய்ச்சல் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு அங்கு கட்டுப்படுத்தப்பட்டது.  ஆனால் தற்போது சர்வதேச பயணிகளால் உலகம் முழுவதும்  பரவி வருகிறது.  60க்கும் மேற்பட்ட நாடுகளில் 9000க்கும் மேற்பட்ட நோயாளிகள் இருப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வருகின்றன.  கொரோனாவில் அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் 1000க்கும் மேற்பட்ட நோயாளிகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெரியம்மை தடுப்பூசி மூலம் குரங்கு அம்மை காய்ச்சலைக் கட்டுப்படுத்த முடியும் என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.  மேலும் சர்வதேச பயணம் செய்பவர்களுக்கும் சில அறிவுரைகளை வழங்கியுள்ளது.

1) தோல் புண்கள் உள்ளவர்களுடன் தொடர்பு கொள்வதை தவிர்த்தல்

2) இறந்த அல்லது உயிருள்ள காட்டு விலங்குகளுடன் தொடர்பைத் தவிர்த்தல்  

3) காட்டு விலங்குகளின் இறைச்சியை  சாப்பிடுவதை தவிர்த்தல் மற்றும் ஆப்பிரிக்காவின் காட்டு விலங்குகளில் இருந்து பெறப்பட்ட பொருட்களை (கிரீம்கள், லோஷன்கள், பொடிகள்) பயன்படுத்துவதையும் தவிர்த்தல்

4) நோய்வாய்ப்பட்டவர்கள் பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் பாதிக்கப்பட்ட விலங்குகளுடன் தொடர்பு கொள்வதை தவிர்த்தல்

சர்வதேச பயணிகள், குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்திருந்தால் அல்லது குரங்கு அம்மை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்திருந்தால் அருகில் உள்ள சுகாதார நிலையத்தைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.