டிசம்பர் 4 -ல் தொடங்குகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 4-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது.

நாடாளுமன்ற சிறப்புக்கூட்டத்தொடர் கடந்த செப்டம்பர் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெற்றது. இதையடுத்து, நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த சூழலில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வருகிற டிசம்பர் 4-ம் தேதி தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரில் 15 அமர்வுகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன் 18 மசோதாக்கள் உள்பட முக்கிய அலுவல்களை இந்தக் கூட்டத்தொடரில் மேற்கொள்ளவும் மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

இதையும் படிக்க : "ED அதிகாரி கைது செய்யப்பட்டதை அரசியலாக்கக் கூடாது" - அண்ணாமலை

இந்நிலையில் இந்த கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவதற்கு எதிர்க்கட்சிகள் உள்பட அனைத்துக்கட்சிகளின் ஆதரவையும் அரசு நாடியுள்ளது. இது குறித்து விவாதிப்பதற்காக அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி இந்த கூட்டம் நாடாளுமன்றத்தின் நூலக கட்டிடத்தில் இன்று நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு அனைத்துக்கட்சிகளின் நாடாளுமன்றக்குழு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்  வரும் 22-ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.