மதுரை கிளையில் முதல் பெண் ”சோப்தார்" நியமனம்...!

மதுரை கிளையில் முதல் பெண் ”சோப்தார்" நியமனம்...!

உயர் நீதிமன்றம் மதுரை கிளையில்  முதல் பெண் ‘சோப்தாராக"  லலிதா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். 

சோப்தார் :

உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் தங்களது தனி அறையில் இருந்து நீதிமன்ற அரங்குக்கு செல்லும்போது அவர்களுக்கு முன்பாக 'சோப்தார்' எனப்படும் உதவியாளர்கள், வெள்ளைநிற சீருடை மற்றும் சிவப்பு நிற தலைப்பாகை அணிந்துக்கொண்டு மரியாதை நிமித்தமாகவும், நீதிபதிகளின் வருகையை உணர்த்தும் விதமாகவும் செங்கோலை ஏந்தியபடி சமிக்ஞை (சைகை) கொடுத்துக் கொண்டே செல்பவர்கள் தான் “சோப்தார்”.

சோப்தாரின் பணி:

சோப்தாரின் பணி என்னவென்றால்,  நீதிபதிகளுக்கு தேவையான சட்டப் புத்தகங்களையும், வழக்கு தொடர்பான கோப்புகளையும் எடுத்துத் தருவது உள்ளிட்ட நீதிபதிகளின் அன்றாடப் பணிகளை செய்வது தான் இவர்களின் வேலையாகும். இதுவரை ஆண்கள் தான் சோப்தார்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அதனை மாற்றுவிதமாக பெண் சோப்தார்கள் தற்போது பணியில் நியமிக்கப்படுகின்றனர்.

இதையும் படிக்க: டிசம்பர் 8...13 மாவட்டங்களுக்கு அதிகனமழை எச்சரிக்கை...உங்க மாவட்டம் இருக்கான்னு பார்த்துக்கோங்க!

40 சோப்தார் தேர்வு:

சென்னை உயர்நீதிமன்றம் கடந்தாண்டு 40 சோப்தார் பணியிடங்களை நிரப்புவதற்காக எழுத்துத்தேர்வு நடத்தியது. இதன்மூலம் உயர் நீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாக பெண் நீதிபதிகளுக்கு பெண் சோப்தார் நியமிக்கும் வகையில் 20 பெண் சோப்தார்களை தேர்வு செய்தது.

முதல்பெண் சோப்தார்:

அதன்படி, கடந்தாண்டு ஜூன் மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் பெண் சோப்தாராக திலானி என்பவர் நியமிக்கப்பட்டார். இதன்மூலம் வரலாற்றிலேயே முதல்பெண் சோப்தரானார்.

மீண்டும் பெண் சோப்தார்:

இந்நிலையில் தற்போது, உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் முதன் முதலாக பெண் சோப்தாராக லலிதா என்ற பெண் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் நீதிபதி மாலா என்பவரின் சோப்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து லலிதா பேசுகையில், சோப்தார் பணியில் சேர்ந்தது பெருமையாக இருப்பதாக கூறினார்.