தமிழகத்தின் புதிய ஆளுனராக ரவீந்திர நாராயண ரவி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று பிறப்பித்துள்ளார். இவர் இன்று முதல் தமிழகத்தின் ஆளுனராக செயல்பட உள்ளார்.இந்நிலையில், தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ள ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் ஆர்.என்.ரவி அவர்களுக்கு தனது வணக்கமும் வாழ்த்தும் என பதிவிட்டுள்ளார். மேலும், தங்களது வருகை தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் வளத்துக்கும் ஊக்கமளிப்பதாக இருக்கட்டும் என்றும், தங்களை தமிழ்நாடு வரவேற்கிறது என்றும் அந்த பதிவில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதேபோல், பஞ்சாப் மாநில ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ள பன்வாரிலால் புரோகித்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், பஞ்சாப் மாநில ஆளுநராக பொறுப்பேற்க இருக்கும் பன்வாரிலால் புரோகித் அவர்களை அன்புடனும் மரியாதையுடனும் வழியனுப்பி வைக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார். தனிப்பட்ட முறையில் தன் மீது அவர் அன்புடன் பழகியவர் என்றும், தமிழ்நாடு தங்களை வாழ்த்தி வழியனுப்புகிறது என்றும் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.