திருவள்ளூர் அடுத்த தண்ணீர்குளம் ஊராட்சியில் பெங்களூருவில் இறந்த ஒருவருக்கு இறப்பு சான்றிதழ் கேட்டதால் தர மறுத்த பெண் கிராம நிர்வாக அலுவலரை தகாத வார்த்தைகளால் பேசியும் பணி செய்ய விடாமல் தடுத்ததாக திமுக வை சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் மற்றும் ஊராட்சி எழுத்தர் மீது காவல் நலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் ஒன்றியம் தண்ணீர் குளம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக இருப்பவர் கஸ்தூரி. இந்த ஊராட்சியின் தலைவராக இருப்பவர் தேவிகா. இவரது கணவர் தயாளன். திமுக கிளைச் செயலாளராக உள்ளார்.. ஆனால் ஊராட்சி மன்றத் தலைவரான தேவிகா எந்த பணியிலும் தலையிடாமல் அவரது கணவர் தயாளனே ஊராட்சி நிர்வாகம் சார்பில் மேற்கொள்ள வேண்டிய அனைத்துப் பணிகளையும் செய்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தண்ணீர் குளம் ஊராட்சி மன்றத் தலைவர் தேவிகாவின் கணவர் தயாளன், கிராம நிர்வாக அலுவலரை அணுகி, கர்நாடக மாநிலம் பெங்களூரில் இறந்த ஒருவருக்காக இறப்பு சான்றிதழ் வழங்க வேண்டும் என கேட்டுள்ளார். இதற்கு ஊராட்சி எழுத்தரான சீனிவாசன் என்பவரும் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் தயாளனுக்கு ஆதரவாக செயல்பட்டு இறப்பு சான்றிதழ் வழங்க வேண்டும் என கிராம நிர்வாக அலுவலர் கஸ்தூரியிடம் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் இறந்த ஒருவருக்கு இந்த கிராமத்தில் இறப்பு சான்றிதழ் தர முடியாது என மறுத்துள்ளார். அதனையடுத்து ஊராட்சி மன்றத் தலைவரின் கணவரான தயாளன் என்பவர் கிராம நிர்வாக அலுவலரை தகாத வார்த்தைகளால் பேசியதுடன் பணி செய்ய விடாமல் தடுத்ததுடன் கொலை மிரட்டலும் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு உடந்தையாக ஊராட்சி எழுத்தர் சீனிவாசனும் இருந்ததால் இது குறித்து செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் கஸ்தூரி கொடுத்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து திமுக கிளை செயலாளரும், ஊராட்சி மன்றத் தலைவரின் கணவருமான தயாளன், எழுத்தர் சீனிவாசன் ஆகிய இருவரையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் மூலம் கிராம ஊராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பெண் பிரதிநிதிகளுக்கு பதிலாக அவரின் குடும்ப உறுப்பினர்கள் நிர்வாகத்தில் தலையிட்டு வருவதாகவும், உள்ளாட்சி பெண் பிரதிநிதிகளுடன் அவர்களது கணவர், அல்லது குடும்ப உறுப்பினர்கள் உடன் வந்து அலுவலக நிர்வாகத்தில் பங்கு கொள்வதாகவும் புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. எனவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பெண் பிரதிநிதிகள் மட்டுமே ஈடுபட வேண்டும் என்றும் .உள்ளாட்சி பெண் பிரதிநிதியின் கணவர், அல்லது அவரது குடும்ப உறுப்பினர்கள் எவரும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்திட அனுமதிக்க கூடாது என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். இந்நிலையில் இந்த புகார் மீதான விசாரணையை திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் நேரில் அழைத்து விசாரணை நடத்தி வருகிறார்.