மழை வெள்ளத்தால் சென்னையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பாக மத்திய அரசிடம் விளக்கமாக தெரிவித்துள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப்சிங் பேடி தெரிவித்தார்.
வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. சென்னையில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகள் பாதிப்புக்குள்ளாயின.
இதன் காரணமாக சென்னையில் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பார்வையிடுவதற்கு, மத்திய அரசு உள்துறை இணைச்செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான குழு நேற்று தமிழகம் வந்திருந்த நிலையில், இன்று அவர்கள் சென்னையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தினர்.
மேலும் ஒவ்வொரு இடங்களிலும் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப்சிங் மத்திய குழுவினரிடம் விளக்கமாக தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,மத்திய அரசு அதிகாரிகள், சாலை பாதிப்பு, தண்ணீர் தேங்கி இருப்பது உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்ததாகவும், அதேபோல் 15 மண்டலங்களிலும் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து விவரங்கள் அவர்களிடன் அளிக்கப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்தார்.
அதேப்போல் பாதிப்பு அடைந்துள்ள பகுதிகளில் நிரந்தர தீர்வுகள் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கவும் கேட்டுள்ளதாக கூறிய ஆணையர், சென்னையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் விளக்கமாக மத்திய குழுவிடம் தெரிவித்துள்ளதாகவும் கூறினார்
இந்நிலையில் 25, 26 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனை வானிலை ஆய்வு மையம் கண்காணித்து வருவதாக கூறிய ககன்தீப் சிங் பேடி மாநகராட்சி சார்பில் மழைநீர் அகற்ற தேவையான நடவடிக்கை எடுக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.